வியாழன், 28 ஜூன், 2012

யாருமே ஓட்ட அஞ்சிய பஸ்- டிரைவர் சீட்டை கயிற்றால் கட்டி 'டிரிப்' அடித்த போக்குவரத்து கழகம்!

 சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த பஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்த ஸ்பேர் பஸ்ஸாம். யாருமே இந்த பஸ்ஸை ஓட்ட முன்வருவதில்லையாம். பல ஓட்டைகளுடன் கூடிய இந்த பஸ்ஸின் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டி வைத்திருந்தனராம். இந்த பஸ்ஸைத்தான் நேற்று டிரைவர் பிரசாத் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.
நேற்று சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கீழே இருந்த சர்வீஸ் ரோட்டில் ஒரு நகரப் பேருந்து விழுந்து நொறுங்கியது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

விபத்தில் சிக்கிய பஸ் வட பழனி டிப்போவைச் சேர்ந்ததாகும். இதன் எண் டிஎன் 01 4680. இது உண்மையில் ஒரு ஸ்பேர் பஸ்ஸாகும். ஏதாவது பஸ் பழுதுபட்டு விட்டால் இந்தப் பேருந்தை டிரிப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் இந்தப் பஸ்ஸே மகா மோசமான நிலையில் இருந்துள்ளதாம். எந்த டிரைவருமே இந்தப் பஸ்சை ஓட்டமுன்வர மாட்டார்களாம். அவ்வளவு பிரச்சினைகள் இதில் இருந்துள்ளன. மேலும் மகா கொடுமையிலும் கொடுமையாக டிரைவர் சீட்டே கேவலமாக இருந்துள்ளது. அதாவது கயிறு போட்டு டிரைவர் சீட்டை, பஸ்சின் தரைத் தளத்தில் உள்ள கம்பியோடு கட்டி வைத்துள்ளனர்.
இந்த சீட்டில் அமர்ந்துதான் டிரைவர் பிரசாத் பஸ்ஸை ஓட்டிச் சென்றுள்ளார். பஸ்சில் பல குழப்பங்கள், இருந்தாலும் டிரைவர் பக்கம்தான் முக்கியத் தவறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பஸ்ஸை இடதுபுறமாக திருப்பியபோது அவர் வலது கையில் செல்போனில் பேசியபடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இடது கையால் ஸ்டிரியங்கைப் பிடித்துள்ளார். பஸ்ஸைத் திருப்பும்போது வேகமாக அது போயுள்ளது. அதேசமயத்தில் டிரைவர் சீட்டும் பிடுங்கிக் கொள்ள பஸ் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி விட்டது.
விபத்தில் சிக்கிய பஸ் 2007ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். இதன் மதிப்பு ரூ. 10 லட்சம். இந்தப் பஸ்சின் ஆயுட்காலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இருந்தாலும் ஒட்டுப்போட்டு ஓட்டி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக பணியாளர் சங்கத்தின் தலைவர் சந்திரன் கூறுகையில், இந்த பஸ்ஸை வட பழனி டிப்போவில் யாருமே விரும்ப மாட்டார்கள். ஒரு சாதாரண டிரிப் அடிக்கக் கூட அஞ்சுவார்கள். காரணம், இதில் அவ்வளவு கோளாறுகள் இருந்தன. டிரைவர் சீட்டும் முறையாக இல்லை என்றார்.
இந்த பஸ் மட்டுமல்லாமல் மேலும் பல பஸ்கள் இப்படித்தான்ஓட்டை உடைசலாக உள்ளன. பயணிகளின் உயிர்கள் குறித்தோ, டிரைவர்களின் பாதுகாப்பு குறித்தோ போக்குவரத்துக் கழகம் சற்றும் அக்கறை காட்டுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு பஸ்ஸைக் கொடுத்து ஓட்டச் சொல்லி டிரைவர்களை வற்புறுத்துகின்றனர். வேறு வழியில்லாமல் அவர்களும் இதுபோன்ற பஸ்களை ரிஸ்க் எடுத்து ஓட்டிச் செல்கின்றனர் என்றார்.
ஆனால் இதை வடபழனி டிப்போ அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்தப் பஸ் ஸ்பேர் பஸ் அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டியிருந்தனரா என்பது குறித்து அவர்கள் பதிலளிக்க மறுக்கிறார்கள்.
பஸ் ஓட்டையோ, உடைசலோ மொத்தத்தில் பயணிகள் உயிருடன் விளையாடி விட்டனர்.

கருத்துகள் இல்லை: