வெள்ளி, 29 ஜூலை, 2011

10 நிமிடம் தாமதமாக கையெழுத்து, வீரபண்டியரிடம் போலிஸ் கடுமை

: சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில், நேற்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராகி, கையெழுத்து போட்டார். அவர், தாமதமாக வந்தது குறித்து, எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு, அதிகாரிகள் கேட்டதால் "டென்ஷன்' ஆனார். சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, ரோலர் மில் வழக்குகளில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மூன்று நாள் விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் மாலையில், சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் நிபந்தனை முன் ஜாமினில் வெளியில் வந்த அவர், நேற்று காலையில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்து போட்டார். கோர்ட் உத்தரவுப்படி அவர், காலை 8 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், 10 நிமிடம் தாமதமாக, காலை 8.10 மணிக்கு, கையெழுத்துப் போட்டார். இந்த தாமதத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி, உதவி கமிஷனர் பிச்சை உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் முன்னாள் அமைச்சரிடம் கேட்டார். இதனால், டென்ஷன் ஆன வீரபாண்டி ஆறுமுகம், எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்காமல், தொண்டர்கள் அதிக அளவில் வாசலில் நின்றதால், தாமதம் ஏற்பட்டதாக, அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மூன்று நாட்கள் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தி, அவர்களின் கடமையைச் செய்துள்ளனர். நானும் விசாரணையில், முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, தெரிந்த பதில்களைக் கூறினேன்; தெரியாததை தெரியாது என்று கூறினேன். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதை கோர்ட்டில் சந்திப்பேன். தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.
இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

அப்போது, நிருபர்கள், "உங்கள் ஆதரவாளர்களால் தான், உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக, தி.மு.க.,வினரே பேசிக் கொள்கிறார்களே?' என்று கேட்டனர்.
உடனே, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. யார் சொன்னது? எவன் சொன்னது? எவனாவது ஒருத்தன் பெயரைச் சொல்லு பார்க்கலாம்' என, "டென்ஷன்' ஆகி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறினார்.

நேற்று காலையில் வீரபாண்டி ஆறுமுகத்துடன், ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம், அவரது மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜா, உதவியாளர் சேகர், வழக்கறிஞர் மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர்
வீரபண்டியரிடம் போலிஸ் கடுமை 

கருத்துகள் இல்லை: