சனி, 21 மே, 2011

அல்லக்கைகளும் அடிப்பொடிகளும்,இவற்றின் செம்மொழி அந்தஸ்து


சென்னையின் நம்பர்1 சுற்றுலாத்தலம்
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் காரணமாக செந்தமிழுக்கு இரண்டு புதிய அருஞ்சொற்கள் கிடைத்திருக்கின்றன – அல்லக்கை, அடிப்பொடி. இவை பழைய சொற்களே என்று வாதிடுவோரும் இவற்றின் செம்மொழி அந்தஸ்து இப்போது ஏற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
அல்லக்கைகளின் ஆதிக்கத்தைப் பிடுங்கி அடிப்பொடிகளின் வசமாக்கியிருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருங்குடி மக்கள்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, ஆட்சி வந்தாலும் போனாலும் உணர்ச்சிவசப்படுவதை விட அந்த அ & அ கும்பல்கள் உணர்ச்சிவசப்படுதல் ரொம்பவே அதிகம்.
‘மதுரையில் இருக்கும் போது மருதக்காரனாக இரு’ என்பதைப் போல சில ஊடகங்கள் கடந்த ஐந்து வருடங்களாக ‘அல்லக்கை’யாக இருந்து ஓவர் நைட்டில் ‘அடிப்பொடி’யாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரிஜினல் அல்லக்கைகள் ஒரு போதும் அடிப்பொடியாக மாறுவதில்லை. வைஸ்-வெர்ஸா!
ஐந்தாண்டுக் கால ஆட்சியில் அல்லக்கைகள் டாட்டா சுமோ போன்ற கட்சி வேட்டிகளுக்காகவே இந்தியாவில் உற்பத்தியாகும் ‘கனரக’  வாகனங்களில் சர் புர்ரென்று டோல் காசு கட்டாமல் பறப்பதற்கென்றே கட்சிக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு சென்றதைக் கண்கூடாகக் கண்டோம். கடந்த 13-ம் தேதியன்று அடிப்பொடிகள் அதையே பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். இப்போதெல்லாம் டோலில் அல்லக்கைகள் காசு கட்டித்தான் ஆக வேண்டுமாம். அடிப்பொடிகளுக்கு தான் ஓசி!
இப்படிப் பல விஷயங்களில் அல்லக்கைகள் பின்பற்றிய அதே அரசியல் அரிச்சுவடியை அடிப்பொடிகள் பின்பற்றினாலும் தலைவர்கள் விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கிறது.
காதலர்களுக்கு ஏசி வசதி
கருணாநிதி கட்டினார் என்பதற்காக ஆயிரத்து சொச்சம் கோடி செலவு தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. கருணாநிதிதான் வேண்டாம், போகட்டும். பழைய கோட்டையைப் புதிய நூலகமாக்கிக் கொண்டுவைத்த அந்தப் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் என்ன பாவம் செய்தன? அத்தனையும் கருணாநிதி கரம் பட்டவை என்றுகூடச் சொல்லமுடியாதே? யாரும் பார்க்காத நூலகத்தில், யாரும் தொட்டுத் தடவி, எடுத்துப் புரட்டி வாசிக்கத் தொடங்காத புத்தகங்கள் எத்தனை எத்தனை ஆயிரங்கள்! இனி அவற்றின் கதி என்ன? [கோட்டூர்புரத்தில் உலகத்தரத்தில் ஒரு நூலகம் வேறு கட்டியிருக்கிறார் கருணாநிதி. இன்னும் ஒரு சில தளங்களுக்கு மேலே வேலையே முடியவில்லை. புத்தகங்களும் இன்னும் அடுக்கி முடித்தபாடில்லை. அந்தப் பலநூறு கோடியும்கூடப் பாழா என்ற கேள்வி எழாமலில்லை.]
புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் இப்போதே சுற்றுலாத் தலமாகிக்கொண்டிருக்கிறது என்று நாளிதழ்கள் சொல்கின்றன. இன்னும் சுண்டல் கடைகள் மட்டும்தான் வரவில்லை. கோட்டூர்புர நூலக வளாகத்தில் சைக்கிள் சுக்கு காப்பிவாலாக்கள் வரத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. காந்தி மண்டபக் காதலர்கள் செண்ட்ரலைஸ்ட் ஏசி வசதியுடன் இனி காதல் புரியலாம். ஆட்சி மாற்றம்!
கருணாநிதி அரசு தயாரித்தது என்பதற்காக சமச்சீர் கல்வி புத்தகங்களில் பல பாடங்களுக்கு ‘கட்’ கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. (’ஜிங்ஜாக்’க்குகள் தான் கட் என்பது தனிக் கதை! ஆனால் அடுத்த வருடம் அது ‘ஜாக்ஜிங்’காகப் புதிதாகப் புகாமல் இருந்தால் சரி!)
சமச்சீர் கல்வி முறையே அடுத்தக் கல்வியாண்டில் இருக்காது என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அதை ரத்து செய்ய நேரம் போதாதாம்! ஏன் போதாது? வேண்டுமானால் பள்ளிக்கூடங்களையே ஒரு ரெண்டு மாதம் கழித்துத் திறக்கச் செய்து அதை ரத்து செய்ய வேண்டியது தானே? 50 கோடி ரூபாய் செலவில் பழைய (புதிய?!) தலைமைச் செயலகம் சென்றவருக்கு இதையா செய்ய முடியாது? கல்வியாவது ஒண்ணாவது?! கல்வியை அரசியலாக்கியது போதாது என்று இப்போதெல்லாம் கல்வியிலும் அரசியல் புகுத்துகிறார்கள்!
கேள்வி கேட்டால் ‘அவர்கள் செய்யவில்லையா?’ என்று அடிப்பொடிகளும், ‘இவர்களும் தானே செய்தார்கள்?’ என்று அல்லக்கைகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவார்கள். உலகறிந்தபடியே, அடிப்பொடிகளும் அல்லக்கைகளும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்!
கண்கள் படாமல், கைகள் தொடாமல் - செம்மொழி நூலகம்
ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில இடப் பெயர்களும் பந்தாடப்படுகின்றன. உதாரணம் : கே.கே. நகர் – கலைஞர் நகர் – கே.கே. நகர்!
பேருந்துகளினுள் ஒட்டப்பட்ட நாம், நான், உதடு ஸ்டிக்கர்களை இரவோடு இரவாகப் பிய்த்தெடுக்க ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள் பேருந்து ஊழியர்கள்!
போன ஆட்சிக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியையும் தாண்டி பேரும் புகழும் பெற்றுத் தந்தது மின் வெட்டு! இந்த ஆட்சி வந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் மாநிலமெங்கும் தொடருகின்றன என்று மக்கள் புலம்புகிறார்கள். இப்படி ஒரே நாளில் சரி செய்ய முடிகிற பிரச்னையா என்ன அது?! அமெரிக்க மின் சாதனங்களை இப்போதெல்லாம் சென்னையில் வோல்டேஜ் கன்வர்ட்டர்கள் இல்லாமலேயே உபயோகிக்க முடிகிறதாம். சதா சர்வ காலமும் 110 வோல்ட் அளவிலேயே லோ-வோல்டேஜாக இருந்தால் அப்படித்தான்!
இலவசங்களுக்கான பிள்ளையார் சுழியாக வருகிற 1-ம் தேதியிலிருந்து இலவச அரிசி உத்தரவுக்கு கையெழுத்து போட்டாகி விட்டது!
14-ம் தேதியே ரேஷன் கடைக்குச் சென்று ‘இலவச அரிசி எங்கேய்யா?’ என்று மக்கள் கேள்வி கேட்ட கூத்து பல நாளிதழ்களில் வந்திருந்தது.
தேன் நிலவு கொண்டாட ஜெ.வும் தமிழக அரசும் புதுமணத் தம்பதிகள் அல்ல. ஏற்கெனவே இரண்டு முறை ஆண்டு முடித்தவர்கள்தானே?

கருத்துகள் இல்லை: