ஞாயிறு, 15 மே, 2011

ஜால்ராக்கள் ஓட்டத்தால் எஸ்.ஏ.சி.,க்கு அடித்தது லக்!

முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஜால்ரா போட்டு வந்த தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாரயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராக ராம.நாராயணன் இருந்தார். தி.மு.க., ஆதரவாளரான அவர், தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, திடீரென சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அதிருப்தியாளர்கள் கூட்டம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்தது. கூட்டத்திற்கு தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., தலைமை தாங்கினார். இதில்,  தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ரத்தினம், குஞ்சுமோன் உள்ளிட்டோர், இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், சஞ்சய் ராம், ஆதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., மற்றும் கேயார் ஆகியோர் பேசுகையில், கடந்த ஐந்தாண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்திற்குள் அரசியலை புகுத்தி விட்டனர். ராம.நாராயணன் பதவி விலகல் மூலம் இது நிரூபணமாகியுள்ளது. சங்கத்திற்குள் பல முறைகேடுகள் நடந்துள்ளன. சிறு தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்துள்ளனர்.  தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி, தனிப்பட்டவர்கள் கடன் பெற்றுள்ளனர். வீடு கட்டும் சொசைட்டி என்ற பெயரால் வசூல் நடந்துள்ளது. அதற்கு ரசீது தரவில்லை. ராம.நாராயணனை தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் அனைவரும், வரும் 16ம் தேதிக்குள் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், பொதுக்குழு மூலம் அனைவரையும் நீக்க வேண்டி வரும். மீண்டும் தேர்தல் நடத்தி, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர், என்றனர்.

இதனிடையே மாலையில் மீண்டும் அவசரமாக கூடியது தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம், அதில் ஏற்கனவே உப தலைவராக இருக்கும் நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தலில் மகாத்தான வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க இருக்க நிலையில் அதிமுக.,வுடன் மிக நெருக்கமாக இருக்கும் எஸ்.ஏ.சி.யை தலைவராக்கினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவரை ‌த‌லைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ராம.நாராயணன் தரப்பை சேர்ந்தவர்கள், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  "பெப்சி தலைவராக இருந்த குகநாதனும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கும் அதிருப்தியாளர்கள் புதிய தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, திரையுலகம் பல புதிய சிக்கல்களை சந்தித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: