திங்கள், 16 மார்ச், 2020

விஜய் சேதுபதி அதிரடி : கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது .. மனிதம் ஒன்றே ...வீடியோ

“கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனைக் காப்பாற்றும்” என மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
விஜய்யின் 64வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 15) சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.
விஜய்க்கு முன்பாக பேச வந்த நடிகர் விஜய் சேதுபதி, “லேட்டா வந்தேன்னு கோவிச்சுக்காதீங்க. இதுக்கு யாராவது ஏதாவது வதந்திய கெளப்பி விட்டுடுவாங்க. திருநெல்வேலி ஷூட்டிங்ல இருந்து அடிச்சுப் புடிச்சி ஓடிவந்தேன். அதனாலதான் லேட்டு. காலைல மறுபடியும் ஷூட்டிங் போகனும்” என்றவர், “இந்த படத்துல நான் தான் ஹீரோ. அது எப்படினா, விஜய்க்கு நான் வில்லன்னா, எனக்கு விஜய் வில்லன். அப்போ நான் தான ஹீரோ” என்றும் கலகலப்பாக பேசினார்.

உங்க ரியல் லைப்ல யாரை மாஸ்டரா நினைக்குறீங்க என்று தொகுப்பாளர் கேட்க, ‘என்னோட வழ்க்கைல மாஸ்டர்னா அது என்னோட அப்பாதான். அவரு சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம் இன்னக்கி எனக்கு எங்கேயோ ஒரு இடத்துல பயன்படுது. எனக்கு நிறைய அறிவக் கொடுத்திருக்காரு. ஒரு டைம்ல அவரு போட்டவ பாத்து திட்டிருக்கேன். நான் ரொம்ப நல்லாருக்கேன். இப்ப நீ எங்க இருக்கனு திட்டிருக்கேன்” என்று கூறினார்.
தனது பேச்சில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வையும், மதவெறி எதிர்ப்பையும் ஒன்றுசேர்த்துப் பேசினார்.“கொரோனாவை பார்த்து பயப்படாதீங்க...கொரோனா வந்துடும்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச மறுக்குற நிலைமைல, பரவும்னு தெரிஞ்சும் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பாக்குற அத்தனை பேரையும் நான் வணங்குறேன். கொரோனாவை விட பெரிய வைரஸ் ஒன்னு இருக்கு. அது இங்க ஒரு பேர்ல சுத்திகிட்டு இருக்கு. அந்த வைரஸால யாரும் பாதிக்கப்பட்டுடக் கூடாது.
மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது.மனுஷனை மனுஷன் தான் காப்பாத்தனும். மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம மனிதத்தை மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும். கடவுள் எல்லாம் நம்மை காப்பாத்தாது. மனுஷங்கள நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்” என்று பேசி அப்ளாஸை அள்ளினார்.
நீங்க விஜய்யா இல்ல சேதுபதியா என்ற கேள்வி எழுப்பப்பட, “விஜயகுருநாத சேதுபதி காளிமுத்து” என்று தனது முழுப் பெயரையும் சொல்லி அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
-எழில்

கருத்துகள் இல்லை: