வெள்ளி, 20 மார்ச், 2020

ஏப்ரல் 1: தமிழகத்திலும் மத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்.. தமிழகத்தில் வடஇந்தியர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்

ஏப்ரல் 1: தமிழகத்தில் ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்!மின்னம்பலம் : ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்தத் திட்டத்தை 2020 ஜூன் 30ஆம் தேதிக்குள் அமல்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் காலக்கெடுவும் விதித்தது.
இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன் முன்னோட்டமாகத் தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் பிப்ரவரியில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது.
உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன், “தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்படும்” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமராஜ், “எந்த ரேஷன் கடையிலும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் உள் மாநில பெயர்வு திறன் திட்டம் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன்மூலம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
-எழில்

கருத்துகள் இல்லை: