புதன், 18 மார்ச், 2020

மதுரை சௌராஷ்டிரா மக்கள் ..பழமைவாதம், பெண்ணடிமைத்தனம், மதவெறி ... பாகம் 2

Elangovan Muthiah : மதுரையிலுள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தினரில்
பெரும்பாலோர் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பரவலாக ஆதரவுக் கருத்துகளும் எதிர்ப்புக் கருத்துகளும் வந்து சேர்ந்தன.
அந்தப் பதிவைப் படித்த பிறகு நிறைய சௌராஷ்ட்ர சமூக நண்பர்கள் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்துப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், நான் ஒரு பெரிய சமூகச் சிக்கலின் ஒரு நுனியை மட்டுமே தொட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தின.
நானே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பலர் சங்கிகளாக மாறியிருக்கிறார்கள் என்று நேரடியாக எழுதச் சங்கடப்பட்டுத்தான் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறேன் (இரண்டும் ஒரு வகையில் ஒன்றுதானோ?)
பாஜகவை ஆதரிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட தேர்வு. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் பழமைவாத, இந்துத்துவ, சங்கி சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தும்போது, அது என்ன மாதிரியான பிற்போக்குத் தனமான விளைவுகளை அவர்களிடத்தில் குறிப்பாக புதிய தலைமுறை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தும் என்பது சமூக ஆய்வுகளுக்குரியது.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பதிவு, சௌராஷ்ட்ர சமூகத்தினரின் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் சௌராஷ்ட்ர மொழியில் இடப்பட்டிருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பித் தந்தார். அதன் சுமாரான தமிழாக்கம் இதுதான்....

"பெண்களுக்கு படிப்புதான் தைரியம் கொடுக்கிறது. நான் சொல்றது என்னன்னா, பொண்ணுக படிக்கறத நிப்பாட்டிருங்க, குஜராத்ல எந்தப் பொண்ணையும் படிக்க வைக்கறதில்ல"
சங்கிச் சிந்தனை, குஜராத் மாடல், பதிவர் தேர்ந்தெடுத்திருக்கும் காவி நிறம் இவையணைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான்.
"Identity crisis காரணமாக, அறிவியலுக்கு சற்றும் ஒவ்வாத, நவீன காலச் சிந்தனைகளுக்குப் பொருந்தாத பிற்போக்குத்தனங்களை ஒரு சமூகம் வலிந்து கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது, அது அச்சமூகத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் வருங்காலத்தில் கேடாகவே முடியும்" என்பதுதான் அது.
டிஸ்கி1: இந்த சாம்ப்பிள் மட்டும்தான் என்றில்லை. இது போல ஏகப்பட்ட பழமைவாதம், பெண்ணடிமைத்தனம், மதவெறியைத் தூண்டும் பதிவுகள் உண்டு. அவ்வாறான பல்வேறு டேட்டாக்களை எனக்கு அள்ளித்தருபவர்களும் அதே சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்த முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட நண்பர்கள்தான். எனவே நான் இங்கே பொதுமைப்படுத்துகிறேன் என்கிற பழைய பஞ்சாங்கத்தைப் பாட வேண்டாம்.
டிஸ்கி2: RSS, பாஜகவை ஆதரிப்பது எங்கள் தனிப்பட்ட உரிமை, அதில் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு.... "அங்கு சென்று சேர்ந்தால் இப்படியான பிற்போக்கு சிந்தனைகள்தான் வரும், ஒரு சமூகமாக முன்னேறுவதற்கு இத்தகைய சிந்தனைகள் எக்காலத்திலும் துணை செய்யாது" என்பது புரிந்தால் போதும்.

கருத்துகள் இல்லை: