செவ்வாய், 17 மார்ச், 2020

நெல்லை பயங்கரம்... இரட்டைக் கொலை... பழிக்குப் பழியான கொலை வெறி...!

Tirunelveli incident
Tirunelveli incident   நக்கீரன்  நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி பிரதானச் சாலையிலிருக்கிறது அந்த ஹோட்டல். இரவு நேரம் வியாபார பிசியிலிருக்கும். நேற்றிரவு 8 மணிக்கு மேல் ஹோட்டலின் வியாபாரம் பரபரப்பான நிலையில் காரில் வந்த 7 பேர் கொண்ட அந்தக் கும்பல் சாப்பிடுவதற்காக வந்ததைப் போன்று நோட்டமிட்டவாறே உள்ளே வந்தமர்ந்தது. சப்ளையர் சுரேஷ் (20) அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தபோதே வீச்சரிவாளை உருவிய அந்தக் கும்பல் நொடியில் சுரேஷை வெட்டித்தள்ள ரத்தம் கொப்பளிக்க அவர் அலறிச் சாய்ந்துள்ளார். இதைக் கண்டு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் அறைகுறை சாப்பாட்டுடன் அலறி ஒட்டம் பிடித்தனர். அது சமயம் சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையிலிருந்த ஆறுமுகம் (52) வெளியே வந்து அவர்களைத் தடுத்த நேரத்தில் அவரையும் வெட்டித்தள்ளிவிட்டு காரில் ஏறித்தப்பினர் மர்ம ஆசாமிகள். இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே சடலமாக துடித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தைப் பக்கத்திலுள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரது மூச்சு அடங்கியது.


அடுத்த சில நேரங்களில் சம்பவ இடம், நெல்லை மாவட்ட எஸ்.பி. ஒம் பிரகாஷ் மீனா ஏ.எஸ்.பி. ஹரிஹரன், உள்ளிட்ட போலீஸ் இன்ஸ் ஸ்டீபன் ஜோன்ஸ் என அதிகாரிகளின் முற்றுகைக்குள்ளானது ஆரம்ப கட்ட விசாரணையையும் மேற்கொண்டனர்.

இந்த இரட்டைக் கொலையில் பலியான ஆறுமுகம், நாங்குநேரி அருகிலுள்ள மறுகால் குறிச்சியைச் சேர்ந்தவர். இங்கே ஹோட்டல் வைத்திருக்கிறார். உதவிக்கு அவரது மகன்கள் உட்பட மணிமுத்தாறு பக்கமுள்ள தன் உறவினர் மகன் சுரேஷையும் உடன் வேலைக்கு வைத்திருக்கிறார். ஹோட்டலில் எப்போதும் அவரது மகன்கள் பணியிலிருப்பவர்களாம். வந்த கும்பல் அவர்களையும் ஆறுமுகத்தையுமே குறிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நேற்றைய தினம் பணியாளர் சுரேஷ், சிக்கிக் கொள்ள, ஆள்மாறாட்டமாக அவரைப் பொலி போட்டவர்கள் அடுத்த குறியான ஆறுமுகத்தைச் குதறியிருக்கிறார்கள்.



ஈவு இரக்க மற்ற இரட்டைக் கொலைக்கு அடிப்படை என்ன?

அதே மறுகால்குறிச்சியின் நம்பிராஜன் என்ற வாலிபர் அவரின் இனத்தைச் சேர்ந்த அடுத்த தெருவிலுள்ள வான்மதியைக் காதலித்திருக்கிறார். இருவரும் கருத்தொருமித்த காதலர்கள். ஆனால் வான்மதி மைனர் பெண். இந்தக் காதலை வான்மதியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை கடும் எதிர்ப்பு. விஷயம், போலீஸ் வரை போனது. இருவரும் சம்மதம் என்பதால் சட்டப்படி போலீஸ் அவர்களைப் பிரிக்கவில்லை. ஆனால் 17 முடிந்து 18 வயது வரும் வரை காத்திருந்தனர் காதலர்கள், வான்மதிக்கு. 18 வயது ஆனதும் திருமணம் செய்து கொண்டார் நம்பி ராஜன். நெல்லையிலுள்ள டவுணில் குடித்தனம் நடத்தினர். இவர்களின் காதல் திருமணத்தால் வான்மதியின் குடும்பம் ஆத்திரமானது. நம்பிராஜனை மது குடிக்க அழைத்துச் சென்ற வான்மதியின் உறவினர் அவரை திட்டப்படி ரயில்வே லைனுக்கு அழைத்துச் செல்ல, அங்கு காத்திருந்த கும்பல் நம்பிராஜனை வெட்டி தண்டவாளத்தில் வீசியது. இந்தச் சம்பவம் நடந்தது 2019 நவ 25. இந்தச் சம்பவத்தில் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினர் செல்லத்துரை முருகன் என்று ஐந்து பேர்களை நெல்லை டவுண் போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் நிபந்தனை ஜாமீனில் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

புது மாப்பிள்ளை நம்பிராஜனின் கொலைக்குப் பழியாக செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் அவரது உறவினர் சுரேஷ் இருவரையும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகப் போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொடூர இரட்டைக் கொலையால் பதற்றத்திலிருக்கிறது. நாங்குநேரி மறுகால்குறிச்சி உள்ளிட்ட சுற்றுப்புறக்கிராமங்கள்

கருத்துகள் இல்லை: