வெள்ளி, 13 டிசம்பர், 2019

பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முந்துகிறது

பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி முந்துகிறது
வாக்கு எண்ணிக்கை  மாலைமலர்: பிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. லண்டன்: 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.



கடைசிக்கட்ட பிரசாரத்தின்போது கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் இருந்தன. பெரும்பான்மைக்கு மொத்தம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தொழிலாளர் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

கன்சர்வேடிவ் கட்சி தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.

ஸ்காட்லாந்து தேசிய கட்சியானது, தொழிலாளர் கட்சி வசம் இருந்த ரூதர்கிளன், ஹாமில்டன் மேற்கு ஆகிய தொகுதிகளையும், கன்சர்வேடிவ் கட்சி வசம் இருந்த ஆங்கஸ் தொகுதிகளையும் கைப்பற்றியது.

டார்லிங்டன் உள்ளிட்ட சில தொகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  தொழிலாளர் கட்சியானது தென்மேற்கு  லண்டனில் புட்னி தொகுதியை கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து கைப்பற்றியது.

கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார். போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: