திங்கள், 9 டிசம்பர், 2019

டி கே எஸ் இளங்கோவன் : பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை.... அரசு விவசாயிகளுக்கு சலுகை வழங்க மறுப்பது ஏன்?:


தினகரன் : சென்னை: பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசு விவசாயிகளுக்குச் சலுகை வழங்க ஏன் மறுக்கிறது என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: இந்த அரசாங்கம் பணக்காரர்களை மட்டுமே கவனித்து உதவி செய்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு இந்த அரசு எத்தகைய சலுகை வழங்கப்போகிறது?  துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் ஆயுள் காப்பிட்டுத் திட்டத்திற்கு மக்கள் செலுத்தக்கூடிய பணத்துக்குக்கூட சரக்கு மற்றம் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது ஏழை எளிய, நடுத்தர மக்களின் சேமிப்புத்  திட்டமாகும். வருமான வரித்துறைகூட இந்தத் தொகைக்கு வரிவிலக்கு அளித்திருக்கும் நிலையில் இந்த அரசு சரக்கு மற்றும் சேவை வரி விதித்திருப்பது என்ன நியாயம்.


பொருளாதாரத் தளத்தில் ஏழைகளை வரிகளால் சுரண்டுவது, பணக்காரர்களுக்கு வரிச் சலுகை அளிப்பது என்று நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது. ஆக குடிமக்களின் சமுகப் பொருளாதாரப் பாதுகாப்பது என்பது வேரறுக்கப்பட்டுள்ளது.பிரதமர் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தாரே, அது நிறைவேறியதா? நீங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து பசுமையான கருத்துக்களை முன்வைக்கலாம்.பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசு விவசாயிகளுக்குச் சலுகை வழங்க மறுக்கிறது? விவசாயிகள் தானே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 20 சதவிகிதப் பங்களிப்பு வழங்குகிறார்கள். ஏன் தொழிலாளர்களை இந்த  அரசு புறக்கணித்து அவர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது? பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் பெரும்பான்மை மக்களை மறந்து விட்டு பெருமுதலாளிகளுக்கு மட்டும் ஏன் சலுகை வழங்குகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: