திங்கள், 16 டிசம்பர், 2019

நள்ளிரவில் நடந்தது என்ன?: ஜாமியா மாணவர்கள்!

நள்ளிரவில் நடந்தது என்ன?: ஜாமியா மாணவர்கள்!மின்னம்பலம் : குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
ஜாமியா பல்கலையில் நள்ளிரவு என்ன நடந்தது? மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, பல்கலையிலிருந்த உபகரணங்களைச் சேதப்படுத்தியது என்பது தொடர்பான வீடியோக்கள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன.
பேருந்துக்கு தீ வைத்தது, கண்ணீர் புகை குண்டு வீசியது மட்டுமின்றி உரிய அனுமதி இல்லாமல் பல்கலைக்குள் நுழைந்து மாணவர்களை கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் பல்கலையில் நுழைந்த போது என்ன நடந்தது என்பது குறித்தும், தற்போது மாணவர்களின் மனநிலை குறித்தும் மாணவி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அவர், டெல்லி மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று நினைத்திருந்தோம். இது மத்திய பல்கலைக் கழகம் இதுவும் எங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று நினைத்தோம். ஆனால் தற்போது நாடு முழுவதும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்கிறேன். எங்குச் சென்றாலும் தாக்குதல் நடக்கிறது. இனி எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனது நண்பர்கள் நாளை இந்தியர்களாக இருப்பார்களா என்றும் தெரியவில்லை.
நான் இஸ்லாமிய பெண் கிடையாது. இருந்தும் முதல்நாள் முதல் முதல்வரிசையில் நின்று போராடுகிறேன். உண்மையின் பக்கம் நிற்காவிட்டால் நான் படித்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு பல்கலையில் நடந்ததை குறித்து விவரிக்கும் மற்றொரு மாணவி, ”பல்கலை வளாகத்துக்குள் வந்த போலீசார் மாணவர்களைச் சுற்றி வளைத்தனர். கைதிகள் போல் கைகளைத் தூக்கியவாறே மாணவர்களை வெளியேறச் செய்தனர்.

இந்த சம்பவம் தொடங்கும் போது நாங்கள் பல்கலை நூலகத்திலிருந்தோம். வளாகத்தில் என்ன நடக்கிறது என்பதை சூப்பர்வைசர் நூலகத்துக்குத் தொடர்புகொண்டு தெரிவித்தார். உடனடியாக போலீசார் உள்ளே வந்து துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். அனைவரையும் வெளியே செல்ல வற்புறுத்தினர்.
அப்போது விடுதி அறையை நோக்கி ஓடியபோது, சில மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் சாலையில் கிடந்தார்கள். சக மாணவர்கள் ஒருவர் ஓடி வந்து, ’பெண் காவலர்கள் விடுதிக்குள் நுழைந்துள்ளார்கள். அவர்கள் நம்மைத் தாக்குவதற்காக வருகிறார்கள்’ என்று கதறினர்.
உடனடியாக அங்கிருந்த புதருக்குள் நுழைந்து மறைந்துகொண்டோம். நள்ளிரவு சப்தம் அடங்கியதும் மீண்டும் விடுதிக்குச் சென்றோம். அப்போது மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

போலீசாரை எதிர்த்த மாணவிகள்
சக நண்பரை போலீசார் தாக்கிய போது நான்கு மாணவிகள் அவரை காப்பாற்றி, போலீசாரை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளனர். தன்னுடைய நண்பனைக் காப்பாற்றிய போது அந்த மாணவிகளில் ஒருவர் போலீசாரால் தாக்கப்படுகிறார். அந்த பெண்ணின் காலில் போலீசார் தாக்குகின்றனர். மற்றொரு மாணவி சிறிதும் கலங்காமல் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தி கண்ணில் கோபத்துடன் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பின்னர் அடிவாங்கிய தனது நண்பரையும், பெண்ணையும் உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

இந்நிகழ்வின் போது மாணவர் மீது லத்தியால் தாக்கும் போலீஸில் ஒருவர் காவல்துறையில் சீருடையில்லாமல், ஜீன்ஸ் பேண்ட், சாதாரண ஷூ அணிந்திருக்கிறார், ஆனால் காவல்துறையினர் அணியும் தலைகவசத்தையும் லத்தியும் வைத்திருக்கிறார். இதனால் அவர் காவல்துறை அதிகாரியா? இல்லையா? என பல கேள்விகள் எழுகின்றன.

கருத்துகள் இல்லை: