வியாழன், 19 டிசம்பர், 2019

சோ.தர்மன் எழுதிய 'சூல்' தமிழ் நாவலுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

பாண்டியன் சுந்தரம் : எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய 'சூல்' தமிழ் நாவலுக்கு
2019-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் (2019ஆம் ஆண்டுக்கு ) அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த விருதுக்கான 2019 ஆம் ஆண்டு விருதாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
நேபாள மொழி தவிர்த்த மற்ற மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுப்பட்டியல் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது. நேபாள மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். அந்தவகையில், தமிழில் இந்த ஆண்டு எழுத்தாளர் சோ.தர்மன் தனது சூல் நாவலுக்காக இந்த விருதைப்பெறுகிறார்.
இந்த ஆண்டு இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுகளில், நான்கு மொழிகளில் மட்டுமே நாவலுக்கு விருது வழங்கப்படுகிறது. அதாவது, அஸ்ஸாமீஸ், மணிப்புரி, தமிழ், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் மட்டுமே நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட உள்ளது. இதில் சோ.தர்மன் எழுதிய சூல் நாவல் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
1980-களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி. எழுத்தாளர் பூமணியின் மருமகன் இவர்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்திருக்கிறார்.
1992-இல் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. பிறகு `தூர்வை' , `சோகவனம்' , `வனக்குமாரன்' , `வில்லிசைவேந்தர்' பிச்சைக்குட்டி பிள்ளை, `சோ.தர்மன் சிறுகதைகள் முழுத் தொகுதி', `கூகை' என்று தொடர்ந்து எழுதி வருபவர்.

சூல் நாவல் எது பற்றியது?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உருளைக்குடி, ராஜா காலத்து அரண்மனை அமைப்பிலிருந்து இன்றைய அரசாங்க அமைப்பாக மாறிய பரிமாற்றத்தை கிராமத்து நடையில் கதையாக்கியிருக்கும் படைப்புதான் சூல்.
நிறைசூலியான கண்மாய், வறண்டு போனதைக் குறீயீடாகக் கொண்டு நகரும் நாவல் என்று இலக்கிய ஆர்வலர்களால் பேசப்பட்ட நூல்தான் சூல்.
தேசிய அளவிலான இந்த இலக்கிய அங்கீகாரம் குறித்து இந்த நாவலின் ஆசிரியர் சோ. தர்மனிடம் கேட்டபோது, “சாகித்ய அகாடமி விருது அறிவித்து மத்திய அரசு அங்கீகாரம் தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் நடிகன் அல்ல, நான் ஒரு எழுத்தாளன்; நான் சூரியகாந்தி போல் அல்லாமல் மூலிகை போல் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்!

கருத்துகள் இல்லை: