சனி, 5 அக்டோபர், 2019

ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு- இடைத்தேர்தல் முடிவுக்கு பின்தான் ..நீதிமன்றத்தின் கூத்து

ராதாபுரம்:  மறுவாக்கு எண்ணிக்கை முடிவு- சிரிப்பவர் யார்?மின்னம்பலம் : இந்தியாவிலேயே முதல் முறையாக தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவிடப்பட்ட வழக்கு, அதுவும் நீதிமன்றத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழக்கு என்றால் அது ராதாபுரம் தொகுதி வழக்குதான்.
அதனால் இந்தியா முழுதும் பல அரசியல் சாசன வழக்கறிஞர்கள் இதன் நகர்வை அறியக் காத்திருந்தார்கள் என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்களும், கட்சிக்கார்களும் ஊடகத்தினரும் திரண்டிருந்தனர் .
அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை 11. 30க்கு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணகுமார் நீதிமன்ற அறைக்கு வந்துவிட்டார். வாக்கு எண்ணிக்கை என்றாலே வேட்பாளர்கள் சார்பில் ஏஜெண்ட்டுகள் கலந்துகொள்வார்கள். இந்த விசித்திர வாக்கு எண்ணிக்கையில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் இன்பதுரை ஒரு வேட்பாளராகவே கருதப்படுகிறார். எனவே அவர் சார்பில் அவரே ஏஜென்ட்டாக உள்ளே வந்தார். திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஏஜென்ட்டாக வந்தார். இன்பதுரையோடு உள்ளே இருவர் சட்டையில் ஜெயலலிதா படத்தோடு நுழைந்தனர். அவர்கள் ஏற்கனவே ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகள்.

வாக்கு எண்ணிக்கை துவங்குவதை எப்படியாவது தள்ளிப் போடவேண்டும் என்று இன்பதுரை பல வகைகளில் முயற்சித்தார். எப்படியோ எல்லாவற்றுக்கும் திமுக ஏஜெண்ட் பதில் சொல்லி பகல் 12 மணிக்குதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொகுதியில் மொத்தம் பதிவான தபால் வாக்குகளின் எண்ணிக்கை 1508. அதில், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட்டதால், இன்பதுரை தரப்பின் கோரிக்கையை ஏற்று 262 வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையத்தால் 2016இல் அறிவிக்கப்பட்டவை. இந்த 262 வாக்குகளுடன் மொத்தம் பதிவான 1508 தபால் வாக்குகளும் இன்று மீண்டும் எண்ண ஆரம்பிக்கப்பட்டன.
தபால் ஓட்டு எண்ணிக்கையில் இன்பதுரை தரப்பில் அடிக்கடி புகார்கள் வைக்கப்பட்டன. ‘இங்க பாருங்க கவர் பிரிஞ்சிருக்கு இது செல்லாத ஓட்டு’ என்றார் இன்பதுரை. இன்னொரு தபால் ஓட்டில் , ‘ கிராசிங் ஆகியிருக்கு’ என்று இன்னொரு புகாரைச் சொன்னார்.
இப்படி இன்பதுரை தரப்பில் ஏற்கனவே செல்லாத வாக்குகளாக அறிவிக்கபட்டவற்றை செல்லாத வாக்குகளாகவே ஆக்கும் முயற்சி தொடர்ந்தது. இதற்கிடையில் மதியம் ஒரு மணியளவில் உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை அறிவிக்கத் தடை என்று செய்தி உள்ளே இருந்த இன்பதுரைக்கு சொல்லப்பட்டது. கொஞ்சம் நிம்மதி அடைந்தது போல காட்டிக் கொண்டவர், ‘சாப்பிட்டு எண்ணலாம்’ என்று தேர்தல் அதிகாரியிடம் சொல்ல, அதற்கு அப்பாவுவின் ஏஜெண்ட் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
‘தாமதமாகத்தான் தொடங்கியிருக்கோம். அதனால சாப்பாட்டை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்’ என்று சொல்ல அதிகாரியும், ஊழியர்களும் அதை ஆமோதித்தனர். எனவே தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
தபால் ஓட்டுகளின் வாக்கு எண்ணிக்கையின் போதே பாஜவைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு இருஓட்டு என்று காட்டுவது போல் விரலைக் காட்டினார்கள். இன்பதுரையோடு சென்ற சுயேச்சையினர் இன்பதுரையைக் காட்டி, ‘அண்ணனுக்கு இரண்டு’ என்று சைகை காட்டினர். உதயகுமார் ஆதரவாளர்களும் அங்கே தென்பட்டனர். இன்று இன்பதுரையின் புகாரின் பேரில் சில தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
தபால் ஓட்டுகள் எண்ணிக்கை முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் வெளியே நின்றுகொண்டிருந்த அப்பாவுவை பார்த்த நெல்லை அதிமுகவினர், ‘வாத்தியார் அண்ணாச்சி... உங்களுக்கு 100 மார்க் போலவே’ என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தனர். இன்னும் சிலரோ, ‘செஞ்சுரி அடிச்சுட்டாருலே.....’ என்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு சென்றனர்.
தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் 19,20,21 சுற்றுகளின் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறத் துவங்கியது. இந்த வாக்குகள் எண்ணப்படுவதற்கும் பிளாஷ் பேக் உள்ளது. 2016 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த சமயத்தில் மதியத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் ஆட்சியமைக்கப்போவது உறுதியானது. பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்குப் பிறகுதான் ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21 சுற்றுகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கை அதிமுகவுக்கு சாதகமாக நடைபெற்று அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தற்போது நடைபெறும் மறுவாக்குப் பதிவு தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் எனவும் அவர்கள் திடமாக நம்புகின்றனர். இந்த வாக்கு எண்ணிக்கையில் அப்பாவுவே தனக்கு ஏஜெண்டாக உள்ளே சென்றிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் 23ஆம் தேதியோ அல்லது அதற்கு பிறகோதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் 23 ஆம் தேதி வரை இந்த வாக்கு எண்ணிக்கையை ஒத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்த வாக்கு எண்ணிக்கை முடிவின் தாக்கம் இடைத்தேர்தலில் எதிரொலிப்பது தவிர்க்கப்பட்டுவிட்டது என்று சில வழக்கறிஞர்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பாவு எப்போதும் வாய்விட்டு சிரிப்பதில்லை... ஆனால் இன்று நீதிமன்ற வளாகத்தில் வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார். உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கவே தடை விதித்திருக்கிறது. அண்ணாச்சி சிரிக்க தடை விதிக்கவில்லை’ என்று குசும்போடு சொன்னார் நெல்லை வழக்கறிஞர் ஒருவர்.

கருத்துகள் இல்லை: