புதன், 2 அக்டோபர், 2019

கிஷோர் கே.சாமி கைது : அடுத்தடுத்த வழக்குகளிலும் கைதாகிறார்.. பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக ..

தினகரன் :  சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்காக போராடுபவர்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட டிடிவி ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் மக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை அசோக் நகரை சேர்ந்த டிடிவி ஆதரவாளர் கிஷோர் கே.சாமி. இவர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

சில மாதத்துக்கு முன்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் தொடர்பாக விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். இதற்கு பெண் பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து கடுமையான சொற்களை பயன்படுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் மையம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அளித்த புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை டிடிவி ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய குற்றப்பிரிவில் கிஷோர் கே.சாமி மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், அவர் அடித்தடுத்த வழக்குகளிலும் கைது செய்ய கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: