செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஆன்லைன் டிக்கெட்: கார்ப்பரேட் கேமில் தமிழ் திரைப்படங்கள்!

ஆன்லைன் டிக்கெட்: கார்ப்பரேட் கேமில் தமிழ் திரைப்படங்கள்!மின்னம்பலம் :
தமிழ் சினிமாவின் டிஜிட்டல் கேம் - பாகம் 1 -இராமானுஜம் : சமீப காலங்களாக திரைப்படத் துறை சம்பந்தமான அறிவிப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து வருகிறார்
கோவில்பட்டியில் விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் மஞ்சா வர்மக்கலை பயிற்சிப் பள்ளி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 17ஆம் ஆண்டு விழா மற்றும் வர்ம பிராத்திகாரா சான்றிதழ் வழங்கும் விழா செப்டம்பர் 29 அன்றுநடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்வதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. ஆனாலும் அது விரைவில் அமல்படுத்தப்படும். ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 50 பைசா என்று இருந்த பராமரிப்புச் செலவை நான்கு ரூபாயாக அரசு உயர்த்திக் கொடுத்துள்ளது. இதன் விளைவாக தியேட்டர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.


1000 திரையரங்குகள் நிரந்தரமாகச் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த கடம்பூர் ராஜு, “தமிழ்த் திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் வெளியிடப்படுகிறது. எனவே அங்கிருந்துகூட புதிய திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படலாம். அதை எந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்குத் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் சாத்தியமாகும். எங்கள் யோசனையை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். முடிந்தவரை கட்டுப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக திரையரங்குகள் மூலம் வசூலாகும் டிக்கெட் கட்டணம் முழுமையாக அல்லது உரிய நேரத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் முறையான கணக்கு கிடைப்பதில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது . இது சம்பந்தமாக அவ்வப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் குரல் கொடுத்து வந்தாலும் அதனை சரி செய்வதற்கு திரையரங்குகள் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த வருடம் தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு மாத காலத்திற்குள் தமிழகம் முழுமையும் உள்ள திரையரங்குகள் கணினி மயமாக்கப்படும் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார். ஏற்கனவே 80 சதவிகிதம் திரையரங்குகள் ஆன்லைன் வசதியுடன் இயங்கிவருகின்றன. இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட சர்வர் மூலம் இணைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அப்போதைய தலைவர் நடிகர் விஷால் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்தார்
ஒரு வருடம் முடிந்த பின்னரும் அதுபற்றிய எந்த விதமான முயற்சியையும் தமிழக அரசும், திரையரங்கு உரிமையாளர்களும் எடுக்கவில்லை. திடீரென்று அனைத்து திரையரங்குகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்
அதுவரையிலும் அப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை தயாரிப்பாளர் சார்பில் யாரும் வலிமையோடு வலியுறுத்தவில்லை. இருந்தாலும் கடம்பூர் ராஜு இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பை முழுமனதோடு ஏற்பதாக திருப்பூர் சுப்பிரமணி உடனடியாக அறிவித்தார்.
தமிழக அரசு ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்டுகள் விற்பதை அமுல்படுத்த வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுக்கும் பட்சத்தில் ஒரு வார காலத்திற்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், இதனை அவசர கோலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அமைச்சர் பின்வாங்கியது ஏனென்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படி பேசியதன் பின்னணி என்ன என்ற கேள்வியுடன் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பேசிய போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
தமிழகத்தில் திரையரங்குகளை தனிநபர்களும் ,கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தி வருகின்றனர். திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது மூன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கிறது. சுமார் 1000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டு டிக்கெட் விற்பனையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கும் இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது வருமானத்தை இழப்பதற்கு தயாராக இல்லை.

காரணம், ஆன்லைன் வர்த்தகத்தில் இந்த நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய காலத்தில் திரையரங்குகள் அவ்வளவு எளிதாக இவர்களோடு வியாபார ஒப்பந்தங்களை செய்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவுக்கு தேவையான உபகரணங்களை சேவை நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில் அமைப்பதாக உறுதி கொடுத்த பின்னரே தியேட்டர் உரிமையாளர்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தனர்.
தேநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, முதலில் இலவசமாக தேயிலைத்தூள் தேயிலை தோட்ட முதலாளிகளால் வழங்கப்படும். அந்தப் பழக்கத்திற்கு மக்களிடம் ஈடுபாடு அதிகமானதும், இனிமேல் இலவசமாக வழங்குவதில்லை என்று அறிவிப்பார்கள். எனவே, பணம் கொடுத்து அந்தத் தேயிலைத் தூள்களை வாங்குவார்கள். அதேபோன்ற வியாபார நடைமுறையை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் தொடக்கத்தில்
உருவாக்கினர்.
அதிகமான டிக்கெட் கட்டணத்தால் தியேட்டரில் படம் பார்க்க வரும் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். அந்த நேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு தொடக்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இன்றைக்கு அது 30 ரூபாயாக உயர்ந்திருக்கிறது . இதைப்பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் எந்தவிதமான எதிர்ப்புக்குரலும் எழுப்பவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் அதனை குறைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, அதில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கினார்கள்.
ஆன்லைன் முன்பதிவு சேவை நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் திரையரங்குகளை தமிழக அரசின் சர்வர் மூலம் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
என்ன காரணமாக இருக்கும்?
அடுத்த பாகத்தில்...

கருத்துகள் இல்லை: