சனி, 5 அக்டோபர், 2019

அப்பாவுவிற்கு அநியாயம் இழைத்த அதிகாரிகள்.. இன்பதுரை வெற்றி என்று அறிவித்து விடுங்கள் .. ஜெயலலிதா அலுவலகம்

அப்பாவுவிற்கு அநியாயம் இழைத்த அதிகாரிகள்: அன்று நடந்தது என்ன?மின்னம்பலம் :2016 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்றதாகவும். அப்பாவுவிற்கு 69,541 வாக்குகள் கிடைத்ததாகவும், அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்ற இன்பதுரை வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ராதாபுரம் தொகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
2016 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது போயஸ் தோட்டத்தில் சசிகலா தரப்பு ஆதிக்கம் செலுத்திவந்தது. சசிகலாவுக்கு நம்பிக்கையான ரஜினி என்பவரும் போயஸ் தோட்டத்தில் இருந்தார். அவருடைய போன் வந்தால், அதிகாரிகளே அலறுவார்கள் என்ற அளவுக்கு அவரின் ஆதிக்கம் இருந்தது. ராதாபுரத்தில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட இன்பதுரையும் ரஜினியும் நல்ல நண்பர்கள். இன்பதுரை சசிகலாவின் ஆசிபெற்ற வேட்பாளர் வேறு.

வாக்கு எண்ணிக்கையில் கடைசி வரை அப்பாவு முன்னிலையில் இருந்துவருகிறார். ஆனால், ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து சொன்ன பிறகு காட்சி மாறுகிறது. மாலை நேரத்தில் தபால் வாக்குகளை சரிவர எண்ணாமல் ஊழியர்கள் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். தபால் வாக்குகளில் அதிக வாக்குகளை தான் பெற்றதால் வெற்றியை அறிவிக்க வேண்டும் என்று போராடுகிறார் அப்பாவு.
அந்த சமயத்தில் இன்பதுரை பல போலீஸ் அதிகாரிகளிடமும் பேசுகிறார். ஆனால் போலீஸ் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உடனே போயஸ் கார்டனில் உள்ள ரஜினியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
இதனையடுத்து, ரஜினி உடனே அப்போது முதல்வரின் ஆலோசகராக இருந்த ஷீலா பிரியாவிடமும், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவிடமும் தொடர்புகொண்டுள்ளார். “அம்மா ஆட்சி அமைக்க போகிறார். இந்த நேரத்தில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போராட்டம் நடத்துகிறார். அதனால் வெற்றியை அறிவிக்க அந்த கலெக்டர் யோசிக்கிறாராம். உடனே இன்ப துரையை வெற்றிபெற்றதாக அறிவிக்கச் சொல்லுங்கள்” என்று இருவரிடமும் கூறியிருக்கிறார்.

இரண்டு அதிகாரிகளும் ஜெயலலிதாவிடம் சென்று இந்தத் தகவலைக் கூறியதும் கோபமான ஜெயலலிதா, அந்த அப்பாவுவை வெளியில் தள்ளிவிட்டு இன்ப துரையின் வெற்றியை அறிவிக்கச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
உடனே அப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் கருணாகரனைத் தொடர்புகொண்ட முதல்வரின் அதிகாரிகள், “இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுங்கள். போலீஸை வைத்து அப்பாவுவை வெளியில் இழுத்துத் தள்ளுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதனையடுத்துதான், அப்பாவுவை போலீஸார் குண்டுகட்டாக வெளியில் இழுத்துச் சென்றனர். இன்பதுரையை வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை: