சனி, 5 அக்டோபர், 2019

கலைஞர் அன்றே சொன்ன ... மோடியின் வாழ்த்து மோசடி ..

ராதாபுரம்: அன்றே சொன்ன கலைஞர்! மின்னம்பலம்:  2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளும், 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று மீண்டும் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ணுவதற்கு காரணம் என்னவென விசாரித்தோம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடந்தது. காலை முதலே திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன. மதியம் வரை ஆட்சியமைக்கப்போவது யார் என்ற இழுபறியே நீடித்தது. ஆனால், திமுகவை விட சில இடங்களிலேயே அதிமுக முன்னிலையில் இருந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி காலை 11.15 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் உரையாடினேன். தேர்தல் வெற்றிக்காக அவரிடம் வாழ்த்து தெரிவித்தேன்.” என்று அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தை இணைத்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பிறகுதான் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளும், 19,20, 21 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது என பிரதமரே வாழ்த்து கூறிவிட்டார் என்பதால், ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்து, திமுக வேட்பாளரை குண்டுக்கட்டாக வெளியே அனுப்பி அதிமுக வேட்பாளர் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டது என திமுகவினர் குற்றம்சாட்டினர். இதனை ஸ்டாலினும் கூட தெரிவித்திருந்தார். இதனால்தான் குறிப்பிட்ட அந்த வாக்குகள் மட்டும் மீண்டும் எண்ணப்பட்டன.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு மோடி வாழ்த்து சொன்னதை அப்போதே விமர்சித்திருக்கிறார் கலைஞர். 2016 ஜூன் மாதம் 4ஆம் தேதியே கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் கலைஞர், “வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே 10 மணிக்கெல்லாம் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி சொன்னது மிகப்பெரிய மோசடி” என்று விமர்சித்திருந்தார்.
இப்போது நடைபெறும் பல விஷயங்களில் கலைஞர் முன்பு எப்போதோ சொன்ன கருத்துக்கள் பொருந்திப் போகின்றன. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு கலைஞர் தெரிவித்த கருத்து, தற்போதைய ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரத்திற்கு பொருந்தும் வகையில் உள்ளது

கருத்துகள் இல்லை: