புதன், 3 ஜூலை, 2019

இம்ரான் கான் : கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்

ஆசிப் அலி சர்தாரி - நவாஸ் ஷெரிப்
கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள் - இம்ரான் கான் ஆவேசம்மாலைமலர் : பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு இவர்கள் இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.


பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ’முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகன்கள் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கு இரு வெளிநாடுகள் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தராமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியே போக அனுமதிக்க மாட்டேன். நாட்டின் பணத்தை தந்துவிட்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’ என்று குறிப்பிட்டார்.

’சிகிச்சைக்காக நவாஸ்  ஷெரிப் வெளிநாட்டுக்கு போக விரும்பினால் இங்கு கொள்ளையடித்த பணத்தை எல்லாம் முதலில் அவர் திருப்பித் தந்தாக வேண்டும். முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் இது பொருந்தும்.


அவர்கள் இதற்காக அரசிடம் விண்ணப்பிக்கலாம். ஆனால், இதில் எந்த வெளிநாடும் தலையிட்டு எதுவும் செய்ய முடியாது. பணத்தை கொள்ளையடித்தவர்கள் அதை திருப்பி செலுத்தியாக வேண்டும்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து, வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள இவர்கள் எல்லாம் நம் நாட்டு சிறைகளில் வி.ஐ.பி.க்களைப் போல் வைக்கப்பட்டுள்ளனர். சாதாரணமான சிறைகளில் உள்ள மற்ற கைதிகளுடன் இவர்களையும் சேர்த்து அடைத்து வைக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சகத்தை நான் வலியுறுத்தியுள்ளேன்’ எனவும் இம்ரான் கான் இந்த பேட்டியின்போது தெரிவித்தார். <

கருத்துகள் இல்லை: