ஞாயிறு, 30 ஜூன், 2019

பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர்.. கிருஷ்ணகிரி மாவட்ட தோழர்கள் ..

பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர்!
மின்னம்பலம் : கிருஷ்ணகிரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினால் மற்றொரு இடதுசாரி இயக்கத்தில்தான் இணைவர். உதாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவர் விலகினால் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இணைவார். அல்லது மார்க்சிய-லெனினிய இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுவார். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்வும் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று (ஜூன் 30) தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழிசை, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் ஶ்ரீனிவாச ரெட்டி,ஆனந்த் ரெட்டி,சுதாகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “தளி தொகுதி சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக வெற்றிபெற்ற தொகுதியாகும். அந்தத் தொகுதி பாஜகவிற்கு மீண்டும் கிடைக்கும் என்ற உறுதி இவர்களின் வருகையின் மூலம் கிடைத்திருக்கிறது. விரைவில் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பமாகவுள்ளது.மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் பாஜகவில் இணையவுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை தோல்வியடையச் செய்வதற்காக கம்யூனிஸ்டுகள் பாஜகவை மறைமுகமாக ஆதரித்ததாகவும், பாஜகவின் வெற்றிக்கு கம்யூனிஸ்டுகளின் வாக்குகளும் காரணம் என்றும் கூறப்படும் நிலையில், தற்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் நேரடியாகவே இணைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: