சனி, 27 ஏப்ரல், 2019

வேலூர் தேர்தல்: ஆணையத்தை நாடிய திமுக

வேலூர் தேர்தல்: ஆணையத்தை நாடிய திமுக!மின்னம்பலம் : வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். இதற்கிடையே துரைமுருகன் வீடு, அவரது நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையைக் குறிப்பிட்டு தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு வேலூர் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென ஏ.சி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் மனு அளித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேற்று (ஏப்ரல் 26) தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சிவா, “பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் பணம் விநியோகம் செய்கிறார்கள் என தகவல்கள் வந்தபோதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் வேலூரில் மட்டும் திட்டமிட்டு ஒரு சார்பாக நடந்துகொண்டு தேர்தலை ரத்து செய்திருக்கிறார்கள். ஒரு தொகுதிக்கு மட்டும் பிரதிநிதி இல்லாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது. இது அந்தத் தொகுதி மக்களின் கோரிக்கை. ஆகையால் வேலூரிலும் மக்களவைத் தேர்தலை நடத்த வேண்டும் என மனு அளித்திருக்கிறோம். வரும் மே 19ஆம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்று தெரிவித்தார்.
மதுரையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தாசில்தார் நுழைந்தது தொடர்பாகவும் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்த சிவா, “வாக்கு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் ஒரு தாசில்தார், மற்றும் இரண்டு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை பணியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி பெயரில் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
இரு முக்கிய வேட்பாளர்களும் தேர்தலை உடனடியாக நடத்த மனு அளித்திருக்கும் நிலையில், கடைசி கட்டத் தேர்தலுக்குள் தேர்தல் ஆணையம் வேலூருக்கு தேர்தலை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: