ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

வாக்கு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி.. ஒன்லி ..சஸ்பெண்ட்!

மின்னம்பலம் : வாக்கு இயந்திர அறைக்குள் நுழைந்த அதிகாரி சஸ்பெண்ட்!கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள் முடக்கி வைக்கப்படுவதாகவும் சில கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு அறைக்குள் நேற்று (ஏப்ரல் 20) இரவு பெண் தாசில்தார் சம்பூரணமும் அவரது ஆட்களும் நுழைந்து மூன்று மணி நேரம் செலவிட்டதாகவும், வெளியே வரும்போது சில ஆவணங்களை எடுத்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் அங்கு திரண்டு அதிகாரியின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டனர்.

இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பூரணத்தை பணியிடை நீக்கம் செய்தார். இரவு 7.30 மணியளவில் மதுரை மக்களவைத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் தாசில்தார் சம்பூரணத்தின் சட்டவிரோதமான நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், மாநில தேர்தல் ஆணையரும் விளக்கமளிக்க தாமதித்ததால் இரவு 9 மணியளவில் அப்பகுதியில் போராட்டங்கள் எழுந்தன. போராட்டங்கள் தொடங்கிய பிறகும் அதிகாரிகளிடத்திலிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. சிறிது நேரத்தில் அங்கு வெகுவான கூட்டம் கூடியது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்ததற்கான சாட்சியங்களும், சிசிடிவி காட்சிகளும் இருந்தும் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதே எதிர்க்கட்சி வேட்பாளர்களையும், பொதுமக்களையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. அறையிலிருந்து சில ஆவணங்களையும், நகல்களையும் தாசில்தார் சம்பூரணம் வெளியே எடுத்து வந்ததாகவும் புகாரளித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் பதிலளிப்பதற்கு நான்கு மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது” என்று கூறினார்.

எந்த அறைக்குள்ளும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி நுழைய முடியாது. எனினும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர், “இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். எல்லா அறைகளும் சீலிடப்பட்டிருந்தன. இந்த அறை மட்டும் தவறுதலாக சீல் வைக்கப்படவில்லை போல தெரிகிறது. அனைத்து அறைகளுக்கும் சீல் வைக்கும்படி நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து முறையிட்டனர். மதுரையில் நடந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சத்யபிரதா சாஹூவிடம் திமுக கூட்டணி சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் கூட்டணி அமைத்துள்ளதால் மக்கள் தீர்ப்பை மாற்றி எழுத முயற்சி நடப்பதாகவும், மற்ற இடங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: