வெள்ளி, 26 ஏப்ரல், 2019

4 விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் அகமதாபாத் கமர்சியல் சிவில் கோர்ட்டில் வழக்கு

விகடன் : விவசாயிகள் சந்திக்கும் தாக்குதல்கள் ஒரு
தொடர்கதை.....சிறு விவசாயிகள் தங்கள் சொந்த சேமிப்பில் இருந்து உபயோகப்படுத்திய விதைகளுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு தர வேண்டும் என பெப்சி வழக்கு தொடுத்துள்ளது.
"பெப்சி நிறுவனமானது அதன் தயாரிப்புகளில் ஒன்றான `லேஸ் சிப்ஸ்’ தயாரிப்பதற்காக, FL 2027 OR FC 5 என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய வகையிலான உருளைக்கிழங்கு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.   அதை பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டத்தின்படி (PROTECTION OF PALANT VARIETIES & FARMERS RIGHT ACT 2001) 2016-ல் பதிவு செய்து பெப்சி உரிமையைப் பெற்றிருக்கிறது. அதையடுத்து, பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் அந்த உருளைக்கிழங்குகளைக் கொடுத்து, பயிர் செய்யச் சொல்லி அவர்களிடமிருந்து உருளைக்கிழங்கைப் பெற்று, `லேஸ் சிப்ஸ்’ தயாரிப்புக்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் உளவு நிறுவனம் ஒன்றை அனுப்பிய பெப்சி நிறுவனம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உருளை விவசாயிகளின் நிலத்தை வீடியோ பதிவுகள் செய்தும், அந்த நிலத்திலிருந்து சில உருளைக்கிழங்குகளை எடுத்து வந்து அவர்களுடைய ஆய்வகத்தில் ஆய்வு செய்திருக்கின்றனர். ஆய்வில் பெப்சி நிறுவனம் பதிவு செய்திருந்த உருளை வகையினை, விவசாயிகள் பயிர் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதையடுத்து, `நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கு வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளதால், எங்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ எனக் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நான்கு பேர் மீது பெப்சி நிறுவனம் அகமதாபாத் கமர்சியல் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததோடு, விவசாயிகள் நான்கு பேரும் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென வழக்கு தொடுத்திருக்கிறது. விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்திருக்கும் இந்த வழக்கைக் கண்டு, இந்தியா முழுவதிலும் இருக்கின்ற விவசாயிகள் கொதித்துக் கிடக்கின்றனர். `இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பயிர் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது. எனவே, விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை பெப்சி நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் கூறுகையில், ``பெப்சி நிறுவனம் உருவாக்கிய உருளைக்கிழங்கு வகையானது விவசாயிகளிடமிருந்து கைமாறி கைமாறிப் பல விவசாயிகளிடம் சென்றிருக்கிறது. அதை அந்த விவசாயிகள் பயிர்செய்து வெளிச்சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், குஜராத் பகுதியில் பெப்சி நிறுவனத்தின் ‘லேஸ் சிப்ஸ்ஸிற்கு’ போட்டியாக இரண்டு சிப்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து உருளைக்கிழங்கைப் பெற்றிருக்கிறார்கள். அந்த உருளைக்கிழங்குகளானது, பெப்சி நிறுவனம் உருவாக்கிய உருளைக்கிழங்கு வகை என்று பெப்சி நிறுவனத்துக்குத் தெரிந்த பின்னர்தான் விவகாரம் இப்படியாகியிருக்கிறது.
‘நான் உருவாக்கிய உருளை ரகத்தை வாங்கி நீ சிப்ஸ் போடக்கூடாது’ என பெப்சி நிறுவனம் சம்பந்தப்பட்ட போட்டி நிறுவனங்கள் மீது வழக்கு தொடுத்திருக்கலாம். ஆனால், அது சட்டப்படி செல்லாது. எனவேதான் விவசாயிகள் மேல் சம்பந்தமில்லாமல் பெப்சி நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.
`விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த பொருள்களைப் பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ, பரிமாற்றம் செய்துகொள்ளவோ அல்லது விற்பனை செய்துகொள்ளவோ யாரும் தடை விதிக்க முடியாது’ என பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் 2001 கூறுகிறது. ஒரு நிறுவனம் உரிமை பெற்ற விதையை, இன்னொரு நிறுவனம் அதன் பெயரில் விற்பனை செய்தால்தான் அது குற்றமாகும். அப்படியிருக்கச் சட்டத்தை மீறி விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் வணிகப் போட்டியை வேறுவிதத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக, விவசாயிகளிடம், `நீ இந்த விதையைத்தான் விதைக்கணும். இதை விதைக்கக்கூடாது. என்கிட்ட தான் நீ விதை வாங்கணும்’ என நிர்பந்தப்படுத்த முடியாது. மேலும், விதை பாதுகாப்புச் சட்டத்தை வணிக நோக்கத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தி, விவசாயிகள் மீது தவறான வழக்குகளைப் பதியக் கூடாது'' என்று கூறி இருக்கிறார்"
நன்றி- விகடன் இணைய தளம்.
பெப்சி நிறுவனம் சட்டப்பிரிவு 64 மற்றும் 65 க்கு எதிராக இப்பயிரை வளர்ப்பது தவறு என்கிறது.ஆனால் அதே சட்டத்தின் 39வது பிரிவு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிறது என்கிறது விவசாயிகள் தரப்பு.
எது எப்படி இருந்தாலும் இவ்விஷயத்தில் அளிக்கப் படும் தீர்ப்பில் விவசாயிகளின் எதிர்கால வாழ்வாதார உரிமை அடங்கியிருக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!

கருத்துகள் இல்லை: