ஞாயிறு, 10 ஜூன், 2018

புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்.. தமிழிசை சாமியாட்டம்… விவாதம் பாதியில் நிறுத்தம்.!

kannanJun: கோவை, கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர்.
கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நேற்று ( வெள்ளியன்று ) மாலை 6மணியளவில் துவங்கியது. தொடர் போராட்டங்கள் : அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா ? என்ற தலைப்பில் துவங்கியது. இதில் அரசியல் காரணங்களுக்காக என்று பேச பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக சார்பில் செம்மலை, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், இந்திய குடியரசு கட்சியின் சார்பாக செ.கு.தமிழரசன் ஆகியோர் ஒரு பக்கத்திலும், மறு புறத்தில் அடிப்படை தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவே என்று பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கொங்கு நாடு இளைஞர் பேரவையின் உ.தனியரசு, இயக்குநரும், நடிகருமான அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் காத்திகைசெல்வன் நெறிப்படுத்தினார்.

முன்னதாக நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி பேசிய நெறியாளர் கார்த்திகை செல்வன் ஒவ்வொருவரும் முதல் சுற்றில் தங்களின் கருத்தை எவ்வித இடையூறுமின்றி 5 நிமிடம் பேசுங்கள்.. அதற்கு அடுத்த சுற்றில் விவாதத்தை கொண்டு செல்லலாம் எனக் கூறி திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை அழைத்தார்.
அப்போது டி.கே.எஸ்.இளங்கோ, நாட்டின் விடுதலை துவங்கி எல்லாமே போராட்டத்தால்தான் பெறப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் நல்ல தண்ணீர் வேண்டும். நல்ல காற்று வேண்டும் என கேட்டு போராடுவது குற்றமா..? என்ற ரீதியில் பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி பேசி முடித்தார்.
அதன் பின்னர் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தராஜனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்.
அப்போது தமிழிசை , தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள். இப்போது ஏன் வன்முறை வெடிக்கிறது. என வழக்கமான பல்லவியை பாடினார்.. அப்போது எதிரிலிருந்த கே.பாலகிருஷ்ணனை பார்த்தவுடன்,
இந்த கம்யூனிஸ்ட்கள் இங்கே ( தமிழகம் ) கெயில் குழாய் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் கேரளாவில் கெயில் திட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அவர்களின் ஆட்சியின் சாதனையில் அதனை குறிப்பிட்டும் விளம்பரம் செய்கின்றனர்.
கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியதால்தான் தொழிற்சாலைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கிறது என மூச்சு விடாமல் பேசி முடித்தார்.
அதன் பின்னர், நெறியாளர் கார்த்திகை செல்வன், கே.பாலகிருஷ்ணனை பேச அழைத்தார்..
அப்போது கே.பாலகிருஷ்ணன், இந்த கொங்கு மண் போராட்டத்தால் சிவந்த மண்.. திருப்பூர் குமரன் கையில் கொடியோடு போராடி வீழ்ந்தான், ஸ்டென்ஸ் மில் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கிறது. போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆலை முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வீரம் செறிந்த போரட்டங்கள் நடைபெற்ற மண் இந்த கோவை. விவசாயிகளை திரட்டி போராடிய நராயணசாமி நாயுடு இந்த மண்ணை சேர்ந்தவர்தான்.. உழைப்பாளர்களை திரட்டி போராடிய எங்கள் தோழர் ரமணி உள்ளிட்ட பல்வேறு போராட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இந்தமண்.. அம்மையார் தமிழிசை எந்த மண்ணில் இருந்து போராட்டத்திற்கு எதிராக பேசுகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ( அரங்கம் அதிர கைதட்டல் )
அழுத குழந்தைதான் பால் குடிக்கும்… போராடினால்தான் உரிமைகளை பெற முடியும்.. குழந்தை கூட அழும் போதுதான் தாய் பால் கொடுக்கிறார். குழந்தை சும்மா இருக்கும் போது பால் கொடுப்பதில்லை. குழந்தை கூட அழுது போராடிதான் உரிமையை பெறுகிறது. போராடுவது ஒவ்வொருவரின் உரிமை.( வீசில் சப்தம் காதை பிளக்கிறது )
தமிழிசை அம்மையார் கேட்கிறார்.. 24 வருடமாக இருந்தவர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என்ன நியாயம் என்று கேட்கிறார்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எத்தனை ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரியுமா?
இந்தியாவில் பிரிட்டீஷ்காரன் கூட 200 ஆண்டுகாலமாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்தான். ஆனால் 1947 ல்தான் விடுதலை கிடைத்தது. அப்போது இவ்வளவு நாளாக அடிமையாக இருந்த இந்தியர்கள் இப்போது ஏன் போராடுகிறார்கள் என பிரிட்டீஷ் காரன் கேட்டால் எப்படி இக்குமோ அதே போல்தான் இருக்கிறது.. தமிழிசையின் கருத்து… ( அரங்கமே அதிர்கிறது )
தமிழிசை : … குறுக்கிட்டு பேசவிடாமல் செய்ய முயன்றார்… நான் சுதந்திர போராட்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவள்…
கே.பி : கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. பொறுமை வேண்டும்.. என்னை பதில் சொல்ல அனுமதியுங்கள்..
கார்த்திகை செல்வன் : தலையிடுகிறார்..
கே.பி : அடுத்து சொன்னாங்க… கம்யூனிஸ்ட்கள் கேரளாவில் கெயிலை ஆதரிக்கிறார்கள். இங்கே எதிர்க்கிறார்கள் என்று.. உண்மைதான்.. கேரளாவில் கெயில் பைப் லைன் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் வீட்டிற்குள் பைப் லைன் வருகிறது. விவசாய நிலத்தில் வருகிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்.. நாங்கள் கெயில் பைப் லைன் திட்டம் வேண்டாம் என கூறவில்லை.. விவசாயிகளின் விளை நிலத்தையும், வீட்டையும் அழித்து வேண்டாம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு..
ஏன் கெயில் நிறுவனம் கேரளாவில் ஒரு நிலைபாடும், தமிழகத்தில் ஒரு நிலைபாடும் எடுக்க வேண்டும். அதனை பாஜக ஏன் ஆதரிக்க வேண்டும். ஏன் தமிழகத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு கூட கொடுக்க வேண்டியதில்லையே… அது அரசின் நிலம்தானே அதில் உங்களுக்கென்ன சிரமம். இங்கே இரு நிலை எடுப்பது கம்யூனிஸ்ட்களாக அல்லது பாஜகவா ? (அரங்கத்தின் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஏற்பட்டது )
கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாக கூறுகிறார் தமிழிசை.. நான் கேட்கிறேன்… சென்னையில் ஹூண்டாய், நோக்கியா நிறுவனங்கள மூடியது.. நாங்கள் போராட்டம் நடத்தியதாலா மூடியது.. அரசின் சலுகைகளை பெற்று கொண்டு லாபம் ஈட்டியவுடன் ஓட்டம் பிடித்தன.. நாட்டில் இதுவரை மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் எல்லாம் கம்யூனிஸ்ட்கள் போராடியதால்தான் மூடப்பட்டிருக்கிறதா..?
பாஜக ஸ்டெர்லைட் ஆலையிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போராடிய மக்களுக்கு எதிராக, போராட்டத்தை கொச்சை படுத்தி பேசுகிறது….
தமிழிசை : இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்… இதற்கு ஆதாரம் இருக்கிறதா? ( நாற்காலியின் முனைக்கு வந்து கத்தினார்.. )
கே.பி : தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருங்க… ஆதாரம் இருக்கிறது… சொல்கிறேன் கேளுங்கள்…
தமிழிசை : பேசவிடாமல் மீண்டும் கத்தி ஏதோ சொல்கிறார்…
கார்த்திகை செல்வன் : தமிழிசையை பார்த்து அமைதியாக இருங்கள் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம். . அதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அவரை பேச அனுமதியுங்கள் …
கே.பி : ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்திடம் இந்தியாவிலேயே அதிகமாக நன்கொடை பெற்ற கட்சி பாஜக. அந்த பணத்தை பெற்றுக்கொண்டுதானே இன்று தூத்துக்குடியில் போராடிய மக்களுக்கு எதிராக பேசுகின்றனர்… இங்கே யார் சமூக விரோதி .. ?
பாஜக வேதாந்தா குழுமத்திடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது குறித்த வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது. பல்வேறு அமைப்புகள் வேதாந்தா குழுமத்திடம் எவ்வளவு நன்கொடை ? யார் யார் வாங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அது பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது..
தமிழிசை : மீண்டும் மீண்டும் குறுக்கிட்டு ஏதோ சொல்கிறார்…
கே.பி : நான் சொல்கிறேன்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த நன்கொடையும் பெற்றதில்லை.. தமிழிசை பாஜக எந்த நன்கொடையும் பெற வில்லை என்று கூற முடியுமா… ஏன் எங்கள் கட்சி பத்திரிகைக்கு வேதாந்தா குழுமம் விளம்பரம் தந்த போது அதனை பிரசுரிக்க முடியாது என மறுத்த இயக்கம்.. வேதாந்தா விளம்பரத்தை வெளியிடாத ஓரே பத்திரிகை எங்கள் பத்திரிகை தீக்கதிர்…
தமிழிசை : உண்டியல் குலுக்கிகள்… வெளிநாட்டில் இருந்து பணம்… என ஏது ஏதோ கத்தினார். உடனே கே.பி பேச்சுக்கு ஆதரவாக அரங்கமே ஆர்ப்பரித்து தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..
கே.பி : அம்மையார் தமிழிசை கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்… நான் அதற்கும் பதில் சொல்கிறேன்..
ஆம்.. நாங்கள்.. உண்டியல் குலுக்கிகள்தான்… எங்கள் முழுநேர ஊழியர்களின் அலவன்ஸ்க்கு கூட உண்டியல் குலுக்கி அந்த காசைத்தான் தருகிறோம்.. அதனை மக்களிடம் சென்று உண்டியல் ஏந்தி நேர்மையாக கேட்கிறோம்.. அதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அதற்காக நாங்கள் பெருமை படுகிறோம்….
ஆனால்,
பாஜக போன்று ஸ்டெர்லைட், அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வாலாட்டிக் கொண்டு திரிய மாட்டோம்… ( அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது )
தொடர்ந்து பேசிய கே.பி இன்றைக்கு மூடும் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் 99 நாள் போராடிய போது மூடியிருந்தால் இந்த 13 பேர் உயிரிழப்பே ஏற்பட்டிருக்காது.. அப்ப இந்த உயிரிழப்பிற்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம்… போராடும் மனிதன்தான் முழுமையான மனிதன்.. போராடாத மனிதன் அரைகுறை மனிதன் என முத்தாய்ப்பாக முடித்தார்.
அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன் அதிமுக சார்பில் செம்மலையை பேச அழைத்தார்..
செம்மலை ;அவர் நேரடியாக பதில் அளிக்க முடியாமல் சிகாகோ வரை சென்று பார்த்தார், ஆனால் அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் பொறுமை இழந்து பேசியது போதும் முடியுங்கள் என குரல் கொடுத்தனர்.. அப்படியே கேரளாவிற்கு தாவிய செம்மலை கேரளாவிலும் விவசாய நிலத்தில்தான் கெயில் பைப் லைன் பதித்திருப்பதாக செய்திதாளில் பாத்தேன். அங்கு மக்களை தூண்டி விட ஆள் இல்லை. அதனால் போராட்டம் நடப்பதில்லை.. கூறி மீண்டும் எங்கெங்கோ சென்றார்..
நெறியாளர் காத்திகை செல்வன் இடையில் குறுக்கிட்டு பெரும் பாடு பட்டு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திற்கு அழைத்து வந்தார்..
அப்போது செம்மலை… ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள்,,, ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்..கூறினார்..
அப்போது கார்த்திகை செல்வன், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோவிற்கு தீ வைத்தது யார் என்பது நீங்களும் வெளிவந்த வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள் பின் ஏன் சமூக விரோதிகள் என போராடியவர்கள் மீது பழி போராடுகிறீர்கள் என கேட்டு, நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க கூறினார்… இறுதி வரை கார்த்திகை செல்வன் சமூக விரோதி போல் போராடி செம்மலையிடம் பதிலை பெறமுயன்றார்… ஆனாலும் முடியவில்லை…
அடுத்ததாக அதே அணியில் இருந்த தாமாக ஞானதேசிகனை பேச அழைத்தார்…
ஞானதேசிகன் : அரங்கத்தில் பாஜக, அதிமுகவிற்கு எழுந்த எதிர்ப்பிற்கும், எதிர் முகாமில் இருந்தவர்கள் கொடுத்த பதிலடிக்கும் எப்படியாவது ஒத்தடம் கொடுத்து தேற்ற வேண்டும் என்ற பாணியில் தூப்பாக்கி சூட்டிற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என வாதிட முயற்சித்தார்… அப்போது தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு காவலர்கள் தாக்கப்படுவதை வெளியிடவில்லை.. ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன… போராட்டக்காரர்களிடம் கையில் தடி எப்படி வந்தது.. கல் எப்படி வந்தது… என்றார்..
கார்த்திகை செல்வன் : அப்படியில்லை.. நாங்களும் காவலர்களை தாக்கும் வீடியோவை ஒளிபரப்பினோம்.. நீங்க பார்க்கவில்லை போலும்..
ஞானதேசிகன் : நான் உங்களை சொல்ல வில்லை சில ஊடகங்களை சொன்னேன்.. என்று அதிலிருந்து நழுவி.. மீண்டும் தொடர்ந்தார்… துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இருக்கிறார்.. உசிலம்பட்டியில் இருப்பவருக்கு தூத்துக்குடியில் என்ன வேலை.. இவர் எப்படி அங்கு சென்றார்.. என நீதிமன்றத்தில் குற்றவாளியை மடக்கி விட்டதாக நினைத்து பேசுவது போல் பேசினார்..
காத்திகை செல்வன் : ஏன் தூத்துக்குடி மக்களுக்காக உசிலம்பட்டிக்காரர் போராடக்கூடாதா… ? ஏன் அரசியல் கட்சிகள் மற்ற பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்காக போராடுவது இல்லையா..?
ஞானதேசிகன் : ஆனால் அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் ஓர் அமைப்பை சேர்ந்தவர்..
காத்திகை செல்வன் : ஏன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடக்கூடாதா….?
ஞானதேசிகன் : கூடாது..( மக்கள் கடும் எதிர்ப்பு குரல்… நீ எதற்காக இங்கே பேச வந்தாய்… உன் கட்சியில் இங்கே ஆள் இல்லையா…? ) கடும் எதிர்ப்பு எழுந்தது…தொடர்ந்து பேசிய ஞானதேசிகன்.. எம்ஜிஆர், கருணா நீதி, ஜெயலலிதா, காமராஜர் என எல்லா ஆட்சியிலும் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது என கூறி 13 பேர் படுகொலையையும் நியாயப்படுத்த முயன்றார். மேலும் காவல்துறையில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதியா… என ஜல்லி கட்டு சம்பவத்தையொட்டி ஆட்டோவிற்கு தீ வைத்த போலீசையும் புனிதராக்கும் முயற்சியில் இறங்கினார்… அதற்கு அரங்கத்தில் இருந்தவர்களின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. அப்படியும், இப்படியும் வாதாடி பார்த்தார்… எதுவும் எடுபடவில்லை..
அதன் பின்னர் நெறியாளர் கார்த்திகை செல்வன்… தனியரசை பேச அழைத்தார்…
அப்போது அவரது ஆதரவாளர்கள் பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்…
தனியரசு : போராட்டம் இல்லாமல் எதுவும்மில்லை.. பாதிக்கப்படும் மக்கள் போராடத்தான் செய்வார்கள்.. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாவிட்டால் கண்டுகொள்ளும்படி போராடத்தான் செய்வார்கள்.. புரட்சி வெடிக்கத்தான் செய்யும்.. அதில் சில இழப்புகள் ஏற்படும்… என நேரடியாக சாடினார்… உடனே வன்முறைக்கு ஆதரவளிக்க முடியாது.. என்று கார்த்திகை செல்வன் குறுக்கிட்டார்..
அப்படியென்றால் பாதிக்கப்படும் விவசாயிகள், மக்கள் உரிமைக்காக போராடமால் கை கட்டி கொண்டு அடிவாங்கி சாக வேண்டுமா..?…..
உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… ஊர்வலமாக சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்.. என்றார்… அரங்கமே அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் அந்த கருத்தை வரவேற்றனர்..
அப்போது குறுக்கிட்ட தமிழிசை .. அதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி… ஏதோ பேச முயன்றார்.. அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓசை எழுப்பினர்… தொடர்ந்து பேசிய தனியரசு.. போராடும் இன்றைய சமூக விரோதிகள்தான் நாளைய தலைவர்களாக வருவார்கள்.. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்.. என முடித்தார்..
அதன் பின்னர் இயக்குநரும், நடிகருமான அமீரை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்…
அமீர்.. கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது…. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.. ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை.. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.. அதுபோல ஆட்சியாளர்களும்.., உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்… ( அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.. ) அடுத்து ஏதோ அமீர் பேச முயன்ற போது அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தனர்…
காத்திகை செல்வன் : பாஜகவினரை பார்த்து அமீர் பேசட்டும்.. அதற்கு அனுமதியுங்கள்.. அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார்… அவரும் பேசுவார் என கூறினார்..
அடுத்து அமீர் : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது.. என கேட்டு முடிக்கும் முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… எங்களை பற்றி அமீர் பேசக்கூடாது என உடனே வேளியேற வேண்டும் என பாய்ந்தனர். அங்கிருந்து காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்…
தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்… காத்திகை செல்வன் உங்கள் தரப்பு மாற்று கருத்தை கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.. ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை ஊத்தி மூட வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது கார்த்திகை செல்வன் தமிழிசையை அழைத்து உங்கள் அமைப்பினரை அமைதி படுத்துங்கள் என கூறி கையில் மைக்கை கொடுத்தார்…
ஆனால் தமிழிசை மிகத் தெளிவாக, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால் நம் மீது கருத்தியல் ரீதியான அடி பலமாக இருக்கும்.. அரங்கத்தில் இருந்ததில் சங்பரிவார் அமைப்புகளை தவிர்த்த அனைவரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்று வெளிவந்தால்… பாஜக இன்னும் அம்பலப்பட்டு விடும் என்ற நிலையில் சுதாரித்த தமிழிசை மைக்கை பிடித்து…. இந்த கருத்தை நாம் அனுமதிக்க முடியாது.. நாம் உயிரை இழந்திருக்கிறோம்.. யார் அதை பற்றி பேசினாலும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் வெறியை ஊட்டினார்..
நெறியாளர் காத்திகை செல்வன் பாடு பெரும் பாடு ஆனது…. சுற்றி இருக்கும் காவலர்கள் ரகளையில் ஈடுபடுவர்களை வெளியேற்றவில்லை… ரகளை தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தது.. மீண்டும் பேசிய தமிழிசை… இந்த பேச்சு டிவியில் ஒளிபரப்பப்படாது.. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது… என்று மீண்டும் அதே பல்லவியை பாடினார்… பின்னர் நந்த குமார் அப்படியே நம்மவர்களை இங்கேயே அமரச்சொல்லுங்கள் என கூறினார்… ( கலைந்து அவரவர் இடத்திற்கு செல்லுங்கள் என்று கூறவில்லை..)
இந்த களேபரத்தில் அரங்கத்தின் சங்பரிவார் கும்பல் முன்பகுதிக்கு வந்தவுடனேயே அங்கு அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தை காலி செய்து வெளியேறினர். ரகளை ஓய்ந்தபாடில்லை.. ஞானதேசிகன், கே.பி, டி.கே.எஸ் இளங்கோ உள்ளிட்டோர் சொல்லி பார்த்தனர் கேட்கவில்லை…
ஒரு கட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் முன் பகுதிக்கு வந்து பாஜகவினருக்கு எதிராக ரகளையில் இறங்க… மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.. உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரை சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார்.. அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது..
இதற்கிடையில் பின் பகுதியில் இருந்த பொதுமக்கள் சங்க பரிவாரின் அராஜகத்தை கண்டித்தவாறே அரங்கத்தை விட்டு வெளியேறினர்.. அப்போது இந்த பிஜேபி இப்படி பேச விடாம கலவரம் செய்யுறானுங்க… இப்பவே இப்படின்னா… ஒரு வேள இவங்க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா.. தமிழ்நாடே சுடுகாடா மாறிடும் என அவரவர் பாணியில் தூற்றி விட்டு சென்றனர்..
இதற்கிடையில் மேடைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் கார்த்திகை செல்வனை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள்.. கலவரம் ஏற்பட்டு விடும்.. அனுமதிக்க முடியாது என கூறினர். ( அதே நேரத்தில் அராஜகமாக முன்வரிசைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை கடைசி வரை காவல்துறை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை…அவர்களை அரங்கத்தை விட்டு வெளியேருங்கள் என்று கூட ஒரு வார்த்தை கூற வில்லை. ) கர்த்திகை செல்வன் சிறிது நேரத்தில் முடித்து கொள்கிறோம் என கேட்டுக்கொண்டார். மேலும் காவல்துறை அதிகாரிகள் அமீர் பேசக்கூடாது என்றும் கூறினர்.
அதனை தொடர்ந்து காத்திகை செல்வன் தமிழிசையின் கருத்திற்கு ஆதரவாக பேச வந்திருந்த செ.கு.தமிழரசனை பேசுமாறு கூறினார். உடனே அவரும் பேசத்துவங்கினார். பின்பகுதியில் மிச்சமிருந்த ஒரு பகுதியினர் இது அநியாயம்.. அமீரை பேசச்சொல்லுங்கள் என கத்தினர்.. ஆனாலும் செ.கு.தமிழரசன் பேசிக்கொண்டிருந்தார்…
மேடையில் இருந்த கே.பாலகிருஷ்ணன் நெறியாளர் காத்திகை செல்வனை பார்த்து …அமீர்தானே பேசிக்கொண்டிருந்தார்.. அவர் முழுமையாக ஒரு நிமிடம் கூட பேசவில்லை..பாஜக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்காக அமீரை பேச அனுமதிக்க மறுப்பது எப்படி சரியாக இருக்கும். இது நியாயமே இல்லை… இதனை அனுமதிக்க முடியாது..அமீரை பேச அழையுங்கள் என கூறினார்.. பின்னர்…. அமீர் பக்கம் திரும்பி அமீர் நீங்கள் பேசுங்கள்.. பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்…
உடனே அருகில் இருந்த தனியரசும் நீங்கள் பேசுங்கள் என கூறினர்.. உடனே அமீர் பேசினார்.. அப்போது அமீர்; யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.. நான் அப்படி பேசவும் இல்லை.. ஒரு சம்பவத்தைதான் குறிப்பிட முயன்றேன்.. ஓர் உயிர் போனது குறித்து பேசுவதற்கே நீங்கள் இப்படி ஆவேசமாக என்னை பேசக்கூடாது என்று போராடுகிறீர்களே… அப்படி என்றால் 13 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறதே… அதற்கு போராடாமல் இருக்க முடியுமா… ? போராடுவோம். போராட்டம் தொடரும் என்றார்.. உடேன மேடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக அமீரிடம் பேசியது போதும் நிறுத்துங்கள் என வந்தார்.. அப்போது கேபி தலையிட்டு போலீஸ் அதிகாரியை பார்த்து நீங்கள் ஏன் அமீரை நிறுத்த சொல்கிறீர்கள். ரகளையில் ஈடுபடும் அவர்களை வெளியேற்றுங்கள் என சொன்னார்..
உடனே கார்த்திகை செல்வன் தலையிட்டு நாம் திட்டமிட்டிருந்த நேரம் முடிய போகிறது.. முடியுங்கள் என அமீரை பார்த்து கூறினார்.. அப்போது யார் தடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என கூறி முடித்தார்.
அடுத்து மீண்டும் செ.கு.தமிழரசனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்…
ஆனால் செ.கு.தமிழரசன்.. நடந்த நிகழ்வுகளையும், பாஜக – அதிமுகவிற்கு எதிரான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்பையும் உள்வாங்கிய நிலையில், தனது பேச்சை துவங்கினார்.. அப்போது மக்கள் அடிப்படை உரிமைக்காகவே அன்றாடம் போராட்டம் நடத்துகிறார்கள்.. என துவங்கி போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.. அப்போது இருளடித்தது மாதிரி தமிழிசை வைத்த கண்ணுமாறாமல் செ.கு.தமிழரசனை பார்த்துக் கொண்டே இருந்தார்.. சில நிமிடங்கள் கடந்த நிலையில் தனது பேச்சை கார்த்திகை செல்வனின் வேண்டுகோளை ஏற்று முடித்துக் கொண்டார்..
இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரை தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.. அதற்காகத்தான்.. என்றார் நம்மிடம்…
நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீர் அவர்களை கே.பாலகிருஷ்ணன், மற்றும் தனியரசு ஆகியோர் கூட்டாக அழைத்து கொண்டு ஓரே காரில் மூவரும் சென்றனர்.. முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி கார்கள் நகர்ந்து சென்றன..
தமிழகத்தில் இப்படி ஒரு அக்கீரமம் எப்பையும் நடந்தது கிடையாது.. மோடி கூட்டம் தமிழகத்தில் ஒரு வேளை தப்பி தவறி வந்தா மனித நடமாட்டமே இருக்காது போல… ரொம்ப உஷாரா இருக்கனும் என்று பார்வையாளர்களில் இருவர் அக்கம் பக்கத்தில் பாஜகவினர் இருக்கிறார்களா என்று பார்த்தபடி தங்களுக்குள் பேசியபடி கல்லூரி வாயிலை விட்டு வெளியேறிச் சென்றனர்.
அதற்கடுத்து வந்த ஒருவர்…. நிகழ்ச்சி நடக்கிறப்பவே.. இந்த பிஜேபி காரனுங்க இப்படி பன்னுராங்க… ஒரு சுற்று கூட முழுமையா முடியவிடல… அதற்குள்ள கலவரத்த ஆரபிச்சனுங்க.. அப்ப இனி நடந்த வரைக்கும் கூட முழுமையா ஒளிபரப்ப விடுவானுங்கன்னு நினைக்கிற… அதுக்கு வாய்ப்பே இல்ல… என கூறிக்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர் அருகில் இருந்த போலீசை பார்த்ததும் பேசாமல் அப்படியே நகர்ந்து சென்றனர்…
குறிப்பு : சம்பவத்திற்கு பின்னர் நேரில் பார்த்ததை கேட்டதை நினைவூட்டி குறிப்பிட்ட விவாதங்கள் மட்டும் இங்கே தொகுத்து தரப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: