புதன், 3 ஜனவரி, 2018

லாலுபிரசாத் யாதவின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு!... கால்நடைத் தீவன ஊழல் வழக்கு

விகடன் தினேஷ் ராமையா  : கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த >லாலு பிரசாத்< உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23-ல் தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட  7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை: