வெள்ளி, 5 ஜனவரி, 2018

திருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை உயிரழப்பு

திருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை பலி!
மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள், கூட்ட நெரிசலில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாபல்லி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாராவ். வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க இவர் தனது மனைவி, மகன், 2 வயது மகள் நட்சத்திரா ஆகியோருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்குச் சென்ற பின்னரே, அவருக்கு கைக்குழந்தைகள் வைத்திருப்போருக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் எழுமலையானைத் தரிசிக்க காத்திருப்பு அறையில் காத்திருந்துள்ளார். அன்று இரவு கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயிலுக்குள் விரைவாகச் செல்லும்படி தேவஸ்தான ஊழியர்கள், அவர்களை இழுத்துத் தள்ளியுள்ளனர் .
இதனால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை தட்டி சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை கண்களை மூடியதால் குழந்தை தூங்கிவிட்டதாக நினைத்துள்ளார். பின்னர் கோயிலை விட்டு வெளியில் வந்த அவர், தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளார். அங்கும் குழந்தை தூங்கிய நிலையிலேயே இருந்ததால், சந்தேகமடைந்த அப்பாராவ் , டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து பல மணி நேரம் ஆனதாகத் தெரிவித்தனர். கோயிலுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தை உயிரிழந்தது குறித்து வெளியில் தெரிந்தால், பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளனர்.இது குறித்து, தேவஸ்தானத்திற்கும் தெரியப்படுத்தவில்லை. ஆனால், திருப்பதியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேவஸ்தானம் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்களுக்கான தரிசனம், நடைபாதை தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வைகுண்ட ஏகாதசியின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியதால் வரிசையில் செல்வதற்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்யவில்லை எனப் பக்தர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: