புதன், 3 ஜனவரி, 2018

வழக்கறிஞர் உயிரிழந்ததால் லாலு பிரசாத் யாதவின் தண்டனை விபரம் நாளை அறிவிப்பு

வழக்கறிஞர் உயிரிழந்ததால் லாலு பிரசாத் யாதவின் தண்டனை விபரம் நாளை அறிவிப்புமாலைமலர் :மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ்க்கு இன்று தண்டனை அளிக்கப்பட இருந்த நிலையில், வழக்கறிஞர் உயிரிழந்ததால் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார். அப்போது கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.


இதையடுத்து பாட்னா ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக 1997-ம் ஆண்டு லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லல்லு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன.

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட மொத்தம் 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 11 பேர் இறந்து விட்டதால் மீதம் உள்ளவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ஒரு வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

லல்லு பிரசாத் உடனடியாக கோர்ட்டிலேயே கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜெயிலில் தண்டனை அனுபவித்த 2 மாதங்களில் லல்லு பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் விடுதலையானார். லாலு பிரசாத் யாதவ் மீதான அரசு கருவூல பணம் ரூ.30 கோடி ஊழல் வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் தொடர்ந்து நடந்து வந்தது.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து, லல்லு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்தது.

தண்டனை அறிவிக்கப்படுவதை ஒட்டி லல்லு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்ததாக தகவல் வந்தது. இதனையடுத்து, தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்தது

கருத்துகள் இல்லை: