புதன், 15 நவம்பர், 2017

விஜயகாந்த் : கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஆளுநர் கவனம் செலுத்திடவேண்டும்

நக்கீரன் :தமிழக ஆளுநர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை: ’’தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவைவில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். தமிழக நலனுக்காக இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் தமிழக ஆட்சியாளரின் அவலத்தை பறைசாற்றும் விதமாகவே அமைந்துள்ளது. இதற்குமுன் இதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடந்ததாக தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சியை, ஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள் மாறி மாறி ஆட்சி செய்யும் நிலை உருவாகியதின் விளைவு, ஒரு நிலையான உறுதித்தன்மை இல்லாததையே இந்த ஆட்சி காட்டுகிறது.

 பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சி செலுத்த முயல்கிறது என்பதையே இந்தநிகழ்வு பறைசாற்றுகிறது. இதற்கு உதாரணமே டெல்லி, புதுச்சேரி. அதேபாணியில் நமது தமிழ்நாட்டிற்கும் இந்தநிலை வந்துவிட்டதே என்று தமிழக மக்கள் எண்ணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடந்துகொண்டிருப்பது நிர்வாகத்திறமையே இல்லாத ஒரு ஊழல் ஆட்சி. மேலும் உள்ளாட்சி அமைப்புக்களே இல்லாமல், மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்த முடியாத நிலையில் தான் தமிழக அரசாங்கம் இருக்கிறது. மேலும் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் தமிழக ஆளுநர் கவனம் செலுத்திடவேண்டும். ’

கருத்துகள் இல்லை: