திங்கள், 13 நவம்பர், 2017

மீண்டும் காங்கிரஸில் வாசன்? அங்கிட்டு சரத்து ,,, இங்குட்டு வாசு !

 மின்னம்பலம்  தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை 2014ஆம் ஆண்டு தனது தந்தை பாணியில் தொடங்கிய ஜி.கே.வாசன், இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வருவாரா என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் இருந்து மெல்லக் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
1996ஆம் ஆண்டு காங்கிரஸ் தேசிய தலைமையின் கூட்டணி முடிவை எதிர்த்து தமாகாவைத் தொடங்கினார் மூப்பனார். அக்கட்சி பின்பு 2002ஆம் ஆண்டு ஜி.கே.வாசனால் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. 2002 முதல் 2014 வரை ராஜ்ய சபா எம்.பியாக மத்திய அமைச்சராக இருந்த வாசன், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் தமாகாவைத் தொடங்கினார்.

திருச்சியில் நடந்த தமாகா தொடக்க விழாவில் பேசிய வாசன், “2002இல் தமாகா ஏன் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் நாம் அந்தக் கட்சியோடு சேரவில்லை. வகுப்புவாத சக்திகள் மீண்டும் தலைதூக்கக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் நாம் காங்கிரஸோடு இணைந்தோம். ஆனால், அந்த எண்ணம் முழுமையாக நிறைவேறவில்லை. குறிப்பாக கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றுவதிலும், குறிப்பிட்ட தலைவர்களைச் சமாதானம் செய்வதிலுமே காங்கிரஸ் தலைமை முழு மூச்சாக செயல்பட்டு வந்தது. மாநிலத் தலைவர்களின் கோரிக்கைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மாநில நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. மக்களுடனான நேரடி தொடர்பு என்கிற வேர் அறுக்கப்பட்டதால், காங்கிரஸின் வாக்கு வங்கி சரிந்தது. மக்களின் ஆதரவை காங்கிரஸ் இழக்கத் தொடங்கியது.
இத்தகைய ஒரு சூழலில் காங்கிரஸ் மீண்டும் மக்களோடு இணைந்து பணியாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள தலைவர்களிடம் எடுத்து கூறியும் பலனில்லை. இனியும் அங்கு இருப்பதால் நமக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதால்தான் இன்று மீண்டும் தமாகா உருவாகி உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் நலன் பாதிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, காமராஜர், மூப்பனார் ஆகியோர் வழியில் நேர்மையான, எளிமையான அரசு அமைப்பதுதான் தமாகாவின் லட்சியம்” என்று பேசினார் வாசன்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாக இல்லாமல் ஒரே சக்தியாக திரண்டு நிற்பதையே டெல்லி விரும்புகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட காங்கிரஸ் இருக்கும் திமுக அணியில் தமாகா சேருமா என்ற பேச்சு எழுந்தது. அப்போது ராகுல் காந்தியும் இதற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்ட நிலையில் வாசனுடன் இருக்கும் ஞானதேசிகன் போன்ற சிலர்தான் தமாகாவும் காங்கிரஸும் ஒரே அணியில் இருப்பதைத் தடுத்தார்கள் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், இப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் இரு கட்சிகளின் இரண்டாம்கட்டத் தலைவர்களால் வெளிப்படையாக பேசப்படுகிறது. மோடி கோபாலபுரம் விசிட்டை அடுத்து இந்தப் பேச்சு மேலும் வலுவடைந்திருக்கிறது.
இந்நிலையில் தமாகாவிலுள்ள சிலர் வாசனிடம், ‘நமக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தரப்படும்பட்சத்தில் மீண்டும் காங்கிரஸில் இணைந்து நம்மையும் காங்கிரஸையும் ஒருசேர வலுப்படுத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனராம்.
இந்த முயற்சியில் வாசனுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியும் உதவத் தயாராக இருக்கிறாராம். மூப்பனார் அந்தக் காலத்தில் பிரணாப் முகர்ஜி மீது தனி பாசம் காட்டி வளர்த்தவர். அந்த நன்றியுடன் இருக்கும் பிரணாப் முகர்ஜி, இன்றும் வாசன் மீது மிகுந்த பரிவுடன் இருக்கிறார். அதனால் ஜி.கே.வாசனுக்கும் காங்கிரஸ் தேசிய தலைமைக்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டு வருகிறாராம் பிரணாப்.
இப்போது புள்ளி வைக்கப்பட ஆரம்பித்திருக்கும் இந்தக் கோலம், தேர்தல் நெருங்குகையில் முழுமை அடையலாம் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில்.
- ஆரா</

கருத்துகள் இல்லை: