ஞாயிறு, 12 நவம்பர், 2017

சவுக்கு : கருப்பர் நகரம்.... மெட்றாஸ்... அட்டக்கத்தி... இயக்குநர் ரஞ்சித்

savukkuonline.com :   மெட்றாஸ்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, பரவலான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற படம் இது.  நடிகர் சிவக்குமாரின் மகன், கார்த்தி நடித்துள்ள படம்.
சமூக வலைத்தளங்கள் பிரபலமானது முதற்கொண்டே, திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமூக வலைத்தளங்களின் மூலமாக தங்கள் திரைப்படங்களை பிரபலமாக்க வேண்டும் என்று முனைப்பாக இருக்கின்றனர்.   ஏனென்றால், சன் டிவியின் தர வரிசை, ஆனந்த விகடனின் மதிப்பெண்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருக்கும் அரசியலை, மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
அதனால்தான், முகநூல் மற்றும் ட்விட்டரில் வரும் சில வரி விமர்சனங்களையே மக்கள் அதிகம் நம்புகின்றனர்.   இதனால், திரைப்படங்களின் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், முகநூல் மற்றும் ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்பவர்களை அணுகி, தங்கள் திரைப்படத்தைப் பற்றி பாராட்டி எழுதுமாறு, கேட்டுக் கொள்கின்றனர்.  அதன் அடிப்படையில் சில சமூக வலைத்தள பிரபலங்களும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மெட்றாஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெளியானது.   அந்த திரைப்படம் வெளியானதுமே சமூக வலைத்தளங்களில் இது ஒரு புரட்சிகரமான திரைப்படம் என்று பாராட்டப்பட்டது.   இத்தகைய பாராட்டுக்களுக்கான காரணமாக அவர்கள் சொன்னது, இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு தலித் என்பதும்.
இந்த மெட்றாஸ் திரைப்படம் “ஒரு கருத்தாழமிக்க கலைப்படைப்பு” என்று கூறி, 11 அக்டோபர், சனிக்கிழமை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.   ஒரு தலித் இயக்குநரான ரஞ்சித் இயக்கிய படம் என்பதற்காகவே அது வெகுவாக பாராட்டப்பட்டது.

வள்ளியூர் பாலு என்பவர், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  சென்னையில் ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் நடன வகுப்புகளை நடத்தி வருகிறார்.  திரைப்படத் துறையோடு நெருங்கிய உறவு கொண்டவர். இவரிடம் வளரும் இயக்குநர்கள் பலர் கதை சொல்ல வருவார்கள்.  அப்படி கதை சொல்ல வந்தவர்தான் நட்ராஜ் கோபி.

தயாரிப்பாளர் பாலு
வடசென்னை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு, ஒரு கதை இருக்கிறது என்று கூறுகிறார்.   வடசென்னையைச் சேர்ந்த ஒருவன் சிறந்த கால்ப்பந்தாட்ட வீரனாக இருக்கிறான்.  வறுமையின் காரணமாக அவன் திறமை மறுக்கப்பட்டு, எப்படி சீரழிக்கப்படுகிறான் என்பதுதான் ஒன் லைன். படத்தின் தலைப்பு குதிரை என்று வைத்திருக்கிறார் நட்ராஜ்.
வள்ளியூர் பாலுவுக்கு கதை பிடித்துப் போனதும், விவாதம் தொடங்குகிறது. புதுமுகங்களை வைத்து இயக்கலாம் என்று நட்ராஜ் சொன்னதும், வேண்டாம் நட்சத்திரங்களையே வைத்து எடுக்கலாம் என்று, பாலு சொல்கிறார்.  வடசென்னை மக்களின் வாழ்வு கதை என்பதால், படத்தின் தலைப்பை கருப்பர் நகரம் என்று மாற்றுகிறார்கள்.
படத்தின் கதாநாயகனாக அகிலும், கதாநாயகியாக அருந்ததியும் என்று முடிவு செய்யப்படுகிறது.   முக்கிய வேடத்தில் ஆனந்த் பாபு நடிக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளராக தேவா நியமிக்கப்படுகிறார்.  பாடல் பதிவுகள் அனைத்தும் முடிந்து நவம்பர் 2010ல் விஜிபி கோல்டன் பீச்சில் முதல் நாள் ஷுட்டிங் தொடங்குகிறது. கருப்பர் நகரம் என்ற தலைப்பை சிம்பாலிக்காக காட்டுவதற்காக, ஆப்பிரிக்கர்களை வைத்து அந்தப் பாடல் படமாக்கப்படுகிறது. அதன் பின், பட்டினப்பாக்கம், மைலாப்பூர் லஸ் குடியிருப்பு ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெறுகிறது.
அடுத்த கட்ட படபிடிப்பு ஓட்டேரியில் நடைபெற்று வருகிறது.  அந்த நேரத்தில் தினமலர் நாளேடு ஒரு செய்தி வெளியிடுகிறது.  கருப்பர் நகரம் படபிடிப்பு ஓட்டேரி குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வருவதால், பொதுமக்களுக்கு கடும் இடையூறு என்று அரைப் பக்கத்துக்கு செய்தி வெளியிடுகிறது.  இந்த செய்தியைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடியால் படபிடிப்பு தடைபடுகிறது.
இதையடுத்து, படபிடிப்பு தாமதமானதும், அகில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் நகர்புரம் மற்றும் நந்தி ஆகிய படங்களில் பிசியாகி விடுகிறார்.  அடுத்த கட்டப் படபிடிப்பை தொடங்கலாம் என்று முடிவெடுத்தபோது, அகிலின் கால்ஷீட் கிடைக்கவில்லை.   மீண்டும் மீண்டும் அழைத்தும் அகில் வரவில்லை.  ஒரு கட்டத்தில் எரிச்சலான தயாரிப்பாளர் பாலு, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனிடம் அகிலிடம் நடித்துத் தந்தே ஆகவேண்டும் என்றும், தேதிகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
இந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் இயக்குநர் ரஞ்சித் அட்டக்கத்தி படத்தை தொடங்குகிறார்.   அந்த அட்டக்கத்தி படம், திருவள்ளுர் மாவட்டத்தில் தலித்துகள் பகுதியில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.  கருப்பர் நகரத்தின் படபிடிப்பு மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக, அட்டக் கத்தி படம் ரிலீஸ் ஆகிறது.

இயக்குநர் ரஞ்சித்
அட்டக்கத்தி படத்தைப் பார்த்த, கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் கோபி, கருப்பு நகரம் படத்தின் காட்சிகளில் இருந்து ஐந்து காட்சிகள் அப்படியே அட்டக்கத்தி படத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் பாலுவிடம் தெரிவிக்கிறார்.  அதிர்ச்சி அடைந்த பாலு, எப்படி என்று விசாரிக்கவும், ரஞ்சித், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக, தன்னுடைய கதை விவாதங்களில் பங்கெடுத்ததாகவும், கருப்பு நகரம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ரஞ்சித்துக்கு அத்துப்படி என்றும் கூறுகிறார்.
சரி.  ரஞ்சித் காப்பியடித்த அந்த ஐந்து காட்சிகளையும் மாற்றியமைத்து விட்டு, ஷுட்டிங் தொடங்கலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது.  இந்நிலையில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மெட்றாஸ் ஷுட்டிங் நடக்கிறது.  இந்த சத்தியமூர்த்தி நகர் மாநகராட்சி விளையாட்டுத் திடலில்தான் கதாநாயகன் கால்பந்து விளையாடுவதாக கருப்பர் நகரத்தில் காட்சி அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடந்தது.  அந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டு, கருப்பர் நகரம் படத்தில் நடித்த சார்லஸ் என்பவர், மெட்றாஸ் படத்தின் படபிடிப்பை பார்க்க நேர்கிறது. அவர் நேரடியாக இயக்குநர் ரஞ்சித்திடம் சண்டைக்குப் போகிறார்.  இப்படி இன்னொருவர் படத்தை காப்பியடித்து எடுப்பதற்கு போயி பிச்சையெடுக்கலாமே என்ற தொனியில் கடுமையாக பேசுகிறார்.
இந்த சண்டையைத் தொடர்ந்து, மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித், கருப்பு நகரம் படத்தின் இயக்குநர் நட்ராஜ் கோபியை அழைக்கிறார்.  நட்ராஜிடம், ரஞ்சித், தன்னுடைய படம் வேறு படம் என்றும், நாம் இருவரும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நாம் சண்டையிடுவது, ஆதிக்க சாதியினருக்குத்தான் நலமாகப் போய் முடியும் என்று கூறுகிறார்.  இதையடுத்து, நட்ராஜ், இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடுகிறார்.
இயக்குநர் நட்ராஜ் கோபி, இத்தனை விஷயங்கள் நடந்தும், இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் பாலுவுக்கு தெரிவிக்கவே இல்லை.
இது இப்படியே இருக்கும் சமயத்தில்தான், மெட்றாஸ் படத்தின் ட்ரைலர் மற்றும், கார்த்தியின் பேட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.  படத்தின் ட்ரைலரைப் பார்த்த தயாரிப்பாளர் பாலு அதிர்ந்து போகிறார்.   நம் படத்தின் காட்சியமைப்புகள் அப்படியே இருக்கிறதே என்று, உடனடியாக தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தெரிவிக்கிறார்.   இந்த புகார் தெரிவிக்கப்பட்ட நாள் 19 ஜுலை 2014.  இந்தப் புகார் தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அளிக்கப்படுகிறது.  தயாரிப்பாளர் கவுன்சிலின் செயலர் யார் தெரியுமா ?  மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.



ஞானவேல்ராஜா
ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கையில், எப்படி இந்தப் புகாரின் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் ?   .
இந்நிலையில் மெட்றாஸ் படத்தின் வெளியீடு தேதி 26 செப்டம்பர் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.  இந்த வழக்கு நீதிபதி தமிழ்வாணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.  மெட்றாஸ் படத்தின் கதை, கருப்பர் நகரம் படத்தின் அப்பட்டமான காப்பி.  அந்தப்படத்தை வெளியிட்டால், எனது படத்துக்கு நான் செய்த முதலீடு அப்படியே பாழாய்ப் போகும்.  ஆகையால், இப்படத்தை வெளியிட அனுமதிக்காதீர்கள் என்று வழக்கு தொடுக்கிறார் பாலு.
தமிழ்வாணன், மெட்றாஸ் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குநர் ரஞ்சித்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுகிறார். 22 செப்டம்பர் 2014 அன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உத்தரவிடுகிறார் நீதிபதி தமிழ்வாணன்.
இதையடுத்து, தயாரிப்பாளர் பாலுவுக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
“நான் வன்னி அரசு பேசறேன்.   கொஞ்சம் ஹோட்டல் லீ மெரிடீயனுக்கு வாங்க.  உங்க படம் பத்தி பேசணும்” என்று கூறப்படுகிறது.  தயாரிப்பாளர் பாலு, உடனே கிளம்பி, லீ மெரிடியனுக்கு செல்கிறார்.  அங்கே, வன்ன அரசு,  தொல் திருமாவளவனின் செயலாளர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் மற்றொருவர் அமர்ந்திருக்கிறார்.
பாலுவிடம் அந்த மற்றொருவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  நான்தான் ரஞ்சித். மெட்றாஸ் படத்தின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அப்போதுதான் தயாரிப்பாளர் பாலு, முதன் முதலாக, இயக்குநர் ரஞ்சித்தை சந்திக்கிறார். இரு தரப்பும் தங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைக்கின்றனர்.
இறுதியாக தயாரிப்பாளர் பாலு, நான் இது வரை எடுத்த படத்தையும், மெட்றாஸ் படத்தையும், தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குழு பார்க்கட்டும். அந்த ப்ரிவியூவுக்கு ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   சம்மதமா என்று கேட்கிறார். ஆனால், மெட்றாஸ் இயக்குநர் ரஞ்சித், இதற்கு மறுக்கிறார்.
இறுதியாக, ரஞ்சித், நேரடியாகவே, கருப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளர் பாலுவிடம், கெஞ்சுகிறார்.   இந்த ஒரு முறை பிரச்சினை பண்ணாமல் விட்டு விடுங்கள்.   உங்களுக்கான நான் பிறகு ஏதாவது செய்கிறேன் என்கிறார்.  வன்னி அரசுவோ, அவர் பங்குக்கு, ஒடுக்கபட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவர் வளருகிறார்.  அவரை வளர விடுங்கள் என்று கூறுகிறார்.  தயாரிப்பாளரோ, நான் செலவு செய்த, இரண்டரை கோடிக்கு பதில் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.   இறுதியில் எந்த முடிவும் எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவடைகிறது.
அதன் பிறகு, வன்னி அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மூன்றாவது நாள், வன்னி அரசிடமிருந்து திடீரென்று போன். உடனடியாக கிளம்பி தி நகரில் உள்ள பெதில்டா ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவரை சந்திக்க விரும்புவதாகவும் அவசரமாக வருமாறும் கூறுகிறார்.  பாலுவும் உடனடியாக கிளம்புகிறார்.   பாலு பாதி வழியில் வருகையில், வன்னி அரசு மீண்டும் அழைக்கிறார்.  நீங்கள் இங்கே வந்து, ஞானவேல்ராஜாவிடம் எதுவும் பேசக்கூடாது.   அமைதியாக இருக்க வேண்டும்.  வந்து அவரிடம் கை கொடுத்து விட்டு சென்று விட வேண்டும் என்று கூறுகிறார்.   மேலும் நீங்கள் தனியாகத்தான் வர வேண்டும், வேறு யாரும் வரக்கூடாது என்றும் கூறுகிறார்.  பாலு, என் பணத்துக்கு பதில் சொல்லுங்கள்.  நான் ஏன் ஞானவேல் ராஜாவிடம் கை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அந்த சந்திப்பு நடைபெறாமலேயே நின்று விடுகிறது.
என்ன நடந்திருக்கிறது என்றால், ஞானவேல் ராஜாவோடு நெருக்கமான வன்னி அரசு, “அண்ணே பாலு நம்ப பயண்ணே…. நான் சொன்னா அதைமீறி ஒரு பேச்சு பேச மாட்டாண்ணே… நீங்க வேணும்னா பாருங்க.  இப்போ உடனே வரச்சொல்றேன்….. உங்க கிட்ட ஒரு வார்த்தை பேசாம கையை குலுக்கிட்டு போவான் பாருங்களேன்” என்று பில்டப் கொடுத்துள்ளார்.  அந்த அடிப்படையில்தான், பாலுவை ஞானவேல் ராஜாவை பார்க்க வரச்சொன்னது.
இதன் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தமிழ்வாணன் சரி.. இந்த வழக்குக்கு ஏதாவது ஒரு தீர்வைச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.  தயாரிப்பாளர் பாலு தரப்பு, இது வரை, கருப்பர் நகரம் படத்துக்கு செலவு செய்துள்ள மூன்று கோடியை, நீதிமன்றத்தில் கட்டுமாறு கேட்கிறார்.   ஞானவேல் ராஜா தரப்பு மறுக்கவும், சரி…. படம் ரிலீஸ் ஆகட்டும்.   ரிலீஸ் ஆனதும், படத்தின் வசூல் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு, மெட்றாஸ் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று உத்தரவிடுகிறார்.
இது தொடர்பாக மெட்றாஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித்திடம் பேசினோம்.  உங்கள் மெட்றாஸ் படத்தின் கதை, காப்பியடித்தது என்று கூறப்படுகிறதே என்றதும், யார் சொன்னது அப்படி என்றார்.  தயாரிப்பாளரிடம் பேசினோம் என்றதும், யார் அந்த தயாரிப்பாளர் என்றார்.  பாலு மற்றும் இயக்குநர் கோபியிடம் பேசினோம் என்றதும், அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ளட்டும் என்றார்.  உங்கள் கருத்தாக இதை பதிவு செய்து கொள்ளலாமா என்றதும், என்ன சண்டை போடுவது போல பேசுகிறீர்கள் என்றார்.  சார்…. சண்டை கிடையாது.  அவர்கள் தரப்பில் பேசி விட்டோம்.  உங்கள் தரப்பு நியாயம் என்ன என்பதைக் கூறுங்கள் என்றதும், அவர்களுடையது வேறு கதை.  எங்களுடையது வேறு கதை.  அது ஃபுட்பால் பற்றிய கதை.  எங்களுடையது லைப் பற்றிய கதை என்றார்.  நீதிமன்றத்தில் எங்களுடைய ஒன் லைனும் அவர்களுடைய ஒன் லைனும் அளிக்கப்பட்டுள்ளது.  நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார்.
சரி. நீங்கள் லீ மெரிடீயன் ஹோட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் வன்னி அரசு முன்னிலையில் தயாரிப்பாளர் பாலுவோடு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா என்று கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைந்தார்.  இதை யார் உங்களுக்கு சொன்னது என்றார்.  சார்… நாங்கள் இது தொடர்பான அனைவருடனும் பேசியிருக்கிறோம் என்று சொன்னேன்.   சந்திப்பு குறித்து பேசுங்கள் என்று கூறியதும், தயாரிப்பாளர் பாலுதான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும், அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கட்டிங் எதிர்ப்பார்த்து அந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்றும், தர முடியாது என்று பிடிவாதமாக மறுத்த காரணத்தால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்றும் கூறினார். மெட்றாஸ் படத்தின் கதாநாயகன் கார்த்தி ஏன் கால்பந்து விளையாடும் வீரனாக காட்டப்படுகிறார், ஒரு சண்டைக்காட்சியில் கூட கால்பந்து விளையாடுவதைப் போலவே சண்டையிடுகிறார், கால்பந்து மைதானத்திலேயே பல காட்சிகள் அமைக்கப்பட்டது ஏன் என்பது போன்ற விபரங்களை ரஞ்சித் கூறவில்லை.
இறுதியாக, சம்பந்தமே இல்லாமல் நீங்கள் இந்த விஷயத்தை எதற்காக நோண்டுகிறீர்கள்.   இதைப் பற்றி எழுதி உங்களுக்கு என்ன ஆகப்போகிறது என்றார்.  சார் அவர் உங்கள் மீது ஒரு புகார் தெரிவிக்கிறார்.  நீங்கள் அதை மறுக்கிறீர்கள்.  இதை பதிவு செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றதும், எழுதிட்டுப் போங்க என்று இணைப்பை துண்டித்தார்.
இப்படத்தின் இயக்குநர் கோபியை தொடர்பு கொள்ள முனைந்தபோது, அவர் கத்தி படத்தின் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கரசுப்புவோடு விவாதத்தில் உள்ளதாக தெரிவித்தார்.  அதன் பிறகு பல முறை தொடர்பு கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பியும், அவர் இணைப்புக்கு வரவில்லை.   கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இணைப்பு.
இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசின் தலையீடு
தலித் போராளி என்றும், தலித்துக்களுக்காக உயிரையே கொடுப்பேன் என்றும் கூறிக்கொண்டு, ஞானவேல்ராஜா என்ற கவுண்டரிடம் பணம் வாங்கிக் கொண்டு, தயாரிப்பாளர் பாலு மற்றும், இயக்குநர் கோபி ஆகிய தலித்துக்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள்.  ஒரு தலித் வளரட்டும் என்று ரஞ்சித்துக்கு ஆதரவாக செயல்பட்டால், மூன்று கோடியை செலவு செய்து விட்டு தெருவில் நிற்கும் பாலுவும் தலித்தானே… ?  இந்த தலித் தயாரிப்பாளரின் நலனை விட, கொழுத்த பணம் படைத்த ஞானவேல் ராஜா கவுண்டரின் நலன்தானே வன்னி அரசுக்கு பெரிதாகத் தெரிகிறது ?
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு திரைப்படத்தின் கதை காப்பியடித்தது என்று புகார் எழுகையில், நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொல்லாமல், கல்லாவில் எவ்வளவு சேர்ந்தது என்பதை, நான்கு வாரங்கள் கழித்து தெரிவியுங்கள் என்பது எந்த வகையான தீர்ப்பு என்பது நீதிமன்றத்துக்கே வெளிச்சம்.
தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் தலித்துகள் இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதிகளை விட, தலித்துகளின் பெயரைச் சொல்லி, அவர்களை சுரண்டி வாழும், இந்தப் புல்லுருவிகளே, தலித்துகளுக்கு மிகப்பெரிய எதிரிகள்.
இந்தத் தடைகளையெல்லாம் மீறி, தயாரிப்பாளர் பாலுவும், இயக்குநர் மீஞ்சுர் கோபியும் வெற்றி பெறவேண்டும் என்பதே நமது விருப்பம்.
கருப்பர் நகர படபிடிப்பிலிருந்து சில புகைப்படங்கள்.

கருத்துகள் இல்லை: