திங்கள், 13 நவம்பர், 2017

ரகசிய எண்களைத் திருட ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி!

ரகசிய எண்களைத் திருட ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி!
மின்னம்பலம் : சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், கார்டை டூப்ளிகேட் எடுத்து பணமோசடி செய்யும் 'ஸ்கிம்மர்' என்னும் கருவியைப் பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடிப் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் தெருவில் கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. இதில் பணம் நிரப்புவதற்காகத் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் வந்தனர். பணத்தை நிரப்பிய பின், மிஷினை ஒருமுறை செக் செய்யும்போது, ஏ.டி.எம். கார்டு செருகும் இடத்தில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஸ்கிம்மர் கருவியை இணைத்து, ரகசிய எண் பதிவு செய்யும் இடத்தில் சிறிய கேமராவையும் மர்ம நபர்கள் பொருத்தியிருந்தனர். இதன் மூலம் வாடிக்கையாளரின் தகவல்களைத் திருடி ஏ.டி.எம். கார்டுகளை க்ளோனிங் செய்து, பணத்தைத் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கருவி ஏ.டி.எம். கார்டில் உள்ள தகவல்களை ரகசியமாக ஸ்கேன் செய்யும் கருவி. ஊழியர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த கனரா வங்கி மேலாளர், ஸ்கிம்மர் கருவி, ரகசிய எண்ணை அறிந்துகொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த கேமரா ஆகியவற்றைப் பறிமுதல்செய்து, குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார், ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்திய மர்ம நபர்கள் யார் என்பதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முதல்கட்டமாக ஸ்கிம்மர் பொருத்தப்பட்டிருந்த ஏ.டி.எம் மையத்திலிருந்த மூன்று கண்காணிப்புக் கேமராக்களிலும் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவை பழுதடைந்திருப்பது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்குப் பாதுகாவலர்களும் இல்லாததால், ஸ்கிம்மர் பொருத்திய மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் ஏதும் திருடப்பட்டுள்ளதா என்பது பற்றியும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து திருடு போக வேண்டிய லட்சக்கணக்கிலான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனியார் வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு பேசுகையில்,
"உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை இயந்திரத்தில் 'ஸ்வைப்' செய்வார்கள். அப்போது, ஸ்வைப் செய்யப்படும் கார்டில் உள்ள தகவல்கள், அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடங்கலாமா என்பதை முடிவு செய்யும். அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது. இதுவே ஸ்கிம்மர் கருவி. கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துவிட்டு அதனைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், மறைவிடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒருமுறை உங்கள் கார்டைத் தேய்த்துவிட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும். ஒரு 'ஸ்கிம்மர்' கருவியில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்து கொள்ளமுடியும். பிறகு, அந்தத் தகவல்களை வைத்து டம்மி கார்டு (க்ளோனிங்) தயாரித்து, ரகசியக் குறியீட்டு எண்ணை ஹேக் செய்தோ அல்லது ரகசியக் கேமிராவில் பதிவு செய்ததன் அடிப்படையிலோ, அதனையும் பயன்படுத்தி, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவார்கள்.
மேலும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து விதமான, ஏ.டி.எம் மிஷின்கள் அனைத்தும் எந்த விதமான ஸ்கிம்மர் கருவியும் பொருத்தாத வகையில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இதுவரை உள்ள பழைய மிஷின்கள் அனைத்தையும் மாற்றி ஸ்கிம்மர் கருவி பொறுத்த முடியாத புதுவகையான மிஷின்களை வைக்க அனைத்து வங்கிகளும் முன்வரவேண்டும். இதனால் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். மேலும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து பல லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
மேலும், 2014ஆம் ஆண்டு கிண்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இதேப்போன்று மோசடி செய்து 15 லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அதே கிண்டி பகுதியில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தியதாக, ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரைச் சென்னை காவல்துறையினர் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
எனவே, நம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றாலும், மிகுந்த கண்காணிப்புடன் செயல்படுவது அவசியம். எனவே, ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றால், மிகுந்த கண்காணிப்புடன் உங்கள் ஏ.டி.எம் கார்டை உபயோகிக்க வேண்டும். அவ்வப்போது, நாம் ரகசியக் குறியீட்டு எண்ணை மாற்றினால், இதுபோன்ற செயல்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
-ஆரோன்

கருத்துகள் இல்லை: