வெள்ளி, 17 நவம்பர், 2017

நடராஜனுக்கு 2 ஆண்டு சிறையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் .. லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கு

tamilthehindu :சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் 2010-ம் ஆண்டு நடராஜன் உள்ளிட்டோர் மீது விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர்  சசிகலாவின் கணவர் நடராஜன் லண்டனில் இருந்து, 'லெக் சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல் இறக்குமதி செய்தார். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், 1994ல் வெளியான புதிய ரக கார் என தெரிய வந்தது. வரி ஏய்ப்பு மூலம், 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், உள்ளிட்ட மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, சிபிஐ விசாரித்தது. இதில் நடராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த, எழும்பூர் நீதிமன்றம், கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் உட்பட நான்கு பேருக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, நான்கு பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
நடராஜன் தரப்பில் தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக விசாரிக்காமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் எனவே தங்கள் மீது விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்
இந்த வழக்கின் இறுதி விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. கார் இறக்குமதியில் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றியே செயல்பட்டதாகவும் வரி ஏய்ப்பு என்கின்ற தங்கள் தரப்பினர் மீதான குற்றச்சாட்டு தவறானது என்றும் நடராஜன் தரப்பில் வாதாடப்பட்டது.
புதிய காரை இறக்குமதி செய்து பழைய கார் என்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்கள் முடிந்த நிலையில் நவம்பர் 1-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது அதில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் நடராஜன், வி.என்.பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது விதித்த 2 ஆண்டு தண்டனையை உறுதிப்படுத்தியது

கருத்துகள் இல்லை: