வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

தர்மகுடிகாடு அருந்ததியர் கொலை... ஒட்டுமொத்த தலித் ஒற்றுமைக்கான முயற்சிக்கும் அவமானம்.

ஸ்டாலின் தி: தர்மகுடிகாடு அருந்ததியர் கொலை, பறையருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தலித் ஒற்றுமைக்கான முயற்சிக்கும் அவமானம்.
திட்டக்குடி அருகே உள்ள கிராமம் கோழியூர். அதன் அருகே உள்ள கிராமம் தர்மகுடிகாடு. கோழியூரில் உள்ள வேணுகோபால சாமி கோயிலுக்கு தர்மகுடி காட்டில் கோயில் இருக்கிறது. பல பத்தாண்டுகளாகவே அந்த நிலம் கோழியூர் பிள்ளை மார்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்த நிலம் கோயில் நிலம் என்பதே மறக்கப்பட்டு கோழியூர் பூமிநாத பிள்ளை குடும்ப நிலம் என்றே அறியப்பட்டுவந்தது. அந்த நிலத்தை பராமரிக்கும் பணியை பல ஆண்டுகளாக செய்து வந்த அருந்ததியர் குடும்பமும் அந்த நிலத்திலேயே வசித்தும் வந்ததது. காலம் கடந்து, அந்த நிலத்தைப் பற்றிய தகவலை வி.சி.க. பொறுப்பாளரான கோழியூர் அலெக்ஸாண்டர் அரசு ஆவணத்தின் மூலம் அறிந்து தங்களுக்கும் நிலத்தில் உரிமை வேண்டும் என்று கிளம்ப பூமிநாத பிள்ளை குடும்பம் வெளியேறியது. அதுவரை சரிதான். ஆனால் அங்கேயே வசித்துவந்த அருந்ததியர் குடும்பங்களையும் வெளியேறச் சொன்னதுதான் அலெக்ஸாண்டர் தரப்பின் மாபெரும் பிழை. அந்த பிழையே இன்று கொலைக் குற்றமாக உருவெடுத்து விட்டது.

கோயில் நிலத்தை தலித்துகள் மீட்க வேண்டும் என்பது சரியானது. ஆனால் தலித்-பட்டியலினம்- என்கிற அடையாளம் பறையருக்கு மட்டும் இல்லை என்பதை உணரவேண்டும். அதை உணர்ந்நிருந்தால் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்காது. ஒரு ஏழை, அப்பாவியின் உயிரும் பலியாகியிருக்காது.
முதலில் கடும் கண்டனத்துக் குரிய இத்தீய செயலில் தொடர்புடையவர்கள் தங்களை சட்ட நடவடிக்கைக்கு ஒப்படைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த கோயில் நிலத்தில் உடனடியாக அரசு அங்கே வசித்து வரும் அருந்ததியர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். உரிய நட்ட ஈடும், அரசு வேலையும் கொலையான சிவகுமார் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். மீதம் உள்ள நிலத்திலும் தலித்துகளுக்கு மனை வழங்க வேண்டும்.
ஆண்டுக்காண்டு ஒதுக்கப்படும் தலித்துகளுக்கான நிதிகள் செலவிடப்படாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வீட்டுமனைகளுக்காக அடித்துக்கொள்ளும் நிலை இருக்க நிதிகளோ முடக்கப்படுகின்றன. தர்மகுடிகாடு கொலைக்கு அரசுகளின் அலட்சியமும்கூட காரணம்தான்.
அலெக்ஸாண்டர் விசிக பொறுப்பாளர்தானே தவிர, இத்தாக்குதலை விசிக நடத்தவில்லை. ஆனால் பதில் சொல்லும் பொறுப்பு விசிகவுக்கு இருக்கிறது என்பதை விசிகவும் மறுக்காது என்றே நமபுகிறோம். விசிகவுக்கு மட்டுமல்ல, அதற்கு வெளியே இருக்கும் நமக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல், சமூக அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமாக மக்கள் பிரச்சனையை அனுகவேண்டும் என்கிற பக்குவம் குறைந்து கொண்டே போவது தலித்துகளின் அனைத்துப் பிரிவுகளுக்குமே ஆபத்தாகும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை: