திங்கள், 31 ஜூலை, 2017

வசூலிக்கப்படாத கார்ப்பரேட் கடன்கள்!

இந்தியாவில் உள்ள கடன்களில் 88 சதவிகித கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களே பெற்றுள்ளதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கிருஷ்ணன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்களை ஒன்றிய அரசு வசூலிக்கவில்லை. எஃப்.ஆர்.டி.ஐ என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட ஒன்றிய அரசு மறுக்கிறது.

2016ஆம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்கள் உள்ளது. வட்டியுடன் சேர்த்தால் 14 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. இதில் 88 சதவிகித கடன்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை ஆகும். ஆனால் குறைவாக கடன் பெற்று, கட்ட முடியாமல் இருக்கும் மக்களை பல்வேறு சட்டவிதிகளின் மூலம் ஒன்றிய அரசு தண்டிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 15ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி ஒரு லட்சம் பேர் பேரணியாக சென்று எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்திய வங்கிகளில் 6 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: