திங்கள், 31 ஜூலை, 2017

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது: உயர் நீதிமன்றம்

tamilthehindu : மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.< இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, கடந்த ஜூலை 14-ம் தேதி 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பி்த்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தும், தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதுபோல மாநில பாடத்திட்ட மாணவர்கள் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், சிபிஎஸ்இ மாணவர்கள் அரசாணையை எதிர்த்தும் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி. ராமமோகனராவ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்களாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ஒரு தரப்புக்கு மற்றும் சலுகை வழங்கி மற்றொரு தரப்புக்கு பாகுபாடு பார்ப்பதாக உள்ளது. அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை. மருத்துவ கவுன்சிலின் விதிகள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தெளிவாக உள்ளது.

ஆனால் நீட் தேர்வின் நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்துள்ளது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: