சனி, 5 ஆகஸ்ட், 2017

சித்தராமைய்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு! சமத்துவத்திற்கான தேடல் மாநாடு ..

சமத்துவத்திற்கான தேடல் என்ற மாநாட்டை நடத்தி பெங்களூரு பிரகடனத்தை வெளியிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் ஆகஸ்ட் 05 ஆம் தேதி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''சமத்துவத்திற்கான தேடல் என்ற உன்னத நோக்கத்தோடு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியமைக்காக என்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூலை மாதம் 21 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்ற டாக்டர். பி.ஆர்.அம்பேதகர் சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெங்களூரு பிரகடனத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தேன்.
அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படை அம்சங்களை உளமாற தொடர்ந்து பாதுகாக்கவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான தூண்களை மேலும் வலுப்படுத்தவும் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நான் கருதுகிறேன்.

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட / பழங்குடியின/ பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான இயக்கம் தான் திமுக. இந்தக் கொள்கைகளை அடைவதற்காக, சமத்துவம், சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு சட்டங்களை இயற்றியவர் எனது தலைவர் கருணாநிதி.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு ஆகியவை அடக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலனுக்காக எங்கள் தலைவருடைய சிறப்பான ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களில் சில என்பதை நினைவு கூர விரும்புகிறேன். சமத்துவபுரம் – அனைத்துச் சாதியினரும் ஒரே கூரையின் கீழ் வசிக்கும் நோக்கில் தலைவர் கருணாநிதியின் சிந்தனையில் உருவான உன்னதமான திட்டம். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் அவரால் அமைக்கப்பட்டது.
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் இந்த நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக திகழ்கிறது. எப்போதெல்லாம் மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாத்திட திமுக உறுதியாக எதிர்த்ததோடு, கடுமையாகப் போராடியும் வந்துள்ளது.
எனவே, நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரும், மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், சமூகநீதிக் காவலருமான தந்தை பெரியாரின் கனவுகளையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளையும் மதித்துப் போற்றும் வகையில், பெங்களூரு பிரகடனம் வழங்கியிருந்த சில பரிந்துரைகளை, திமுக அரசு ஏற்கெனவே தமிழகத்தில் நிறைவேற்றியது.
திமுகவின் முக்கிய அங்கமாகத் திகழும், முரசொலி நாளேடு, தனது 75 வது ஆண்டு பவளவிழாவை கொண்டாடும் இந்தத் தருணத்தில், தங்களின் சமத்துவத்துக்கான பிரகடனங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அந்த நாளேட்டில் வெளியிடப்படும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: