வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“ஏமாத்திட்டாங்க தம்பி...ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க,

Hariharasuthan Thangavelu: “சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?"
வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார்,
மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார்.
‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ
“ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார்.


“யாரு ஏமாத்தினாங்க ?, எங்க தாம்பரமா உங்க ஊரு”
“இல்ல தம்பி, காஞ்சிபுரம் !“
ஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், "இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க !"
"ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க" என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க" என்று பணத்தை எடுத்தேன்.
“அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நா பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன். ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார்,
“அட என்னங்கய்யா இது !” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார்,
“ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க!, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,”
கண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி ? "
அவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் கோயமுத்தூர்ங்க என் சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன், “நானும் சென்னை தாங்க !"
- ஹரி

கருத்துகள் இல்லை: