சனி, 3 ஜூன், 2017

கனிமொழி : கலைஞர் தொண்டர்களை விரைவில் சந்திப்பார்!

திமுக தலைவர் கருணாநிதி வெகுவிரைவில் பூரண குணமடைந்து தொண்டர்களைச் சந்திப்பார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று ஜூன் 3ஆம் தேதி காலையில் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆசி பெற்றனர். அதன் பின்னர், அங்கிருந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது கட்சி விழா அல்ல. பிறந்தநாள் விழாவை அரசியல் விழாவாக்குவது ஊடகங்களே. தலைவர் கலைஞர் நன்றாக இருக்கிறார். விரைவில் அவர், தொண்டர்களைச் சந்திக்கும் அளவுக்கு நலம் பெறுவார். டாக்டர்கள் அறிவுரையின் பேரில் அனைவரும் தலைவரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சந்திக்க அனுமதிக்கவில்லை.

இன்று மாலையில், நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். லல்லு பிரசாத் யாதவ் மட்டும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வரவில்லை. பொதுக் கூட்டத்துக்கு வரும் தலைவர்கள் கருணாநிதியை வீட்டில் சந்திப்பது குறித்துத் தெரியவில்லை. அது அப்போதுதான் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், திமுக தலைவரின் பிறந்தநாளையொட்டி, தனது முகநூல் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள பிறந்தநாள் கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: