வியாழன், 29 ஜூன், 2017

உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சிறுமி!

உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சிறுமி!இன்றைய காலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் இல்லாமல் எந்தவித காரியமும் நடப்பதில்லை. இந்நிலையில், தன் தாயின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய தனது உண்டியல் பணத்தை போலீசாருக்கு லஞ்சமாக கொடுக்க முன் வந்த சிறுமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மீரட் அருகே உள்ள கிராமத்தில் சீமா கௌசிக் என்பவர் வசித்து வந்தார். இவர், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால், கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அவரது கணவர் சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். பணம் இல்லாமல் எதுவும் நடக்காது, அதனால் இந்த வழக்கில் மற்றவர்களை கைது செய்ய,போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தி ஸ்வரூப், சீமாவின் ஆறு வயது மகள் மான்வியுடன் மீரட் போலீஸ் ஐ.ஜி., ராம்குமார் அலுவலகத்திற்கு வந்தார். தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யுங்கள். மேலும் தனது கையிலிருந்த உண்டியலை போலீசாரிடம் கொடுத்து, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கூறினார்.
இதையடுத்து, நாங்கள் குற்றச்சாட்டுகளை ஆராய்வோம், வழக்கு முழுமையாக விசாரணை செய்யப்படும், குற்றவாளிகள் கண்டிப்பாக பதிவு செய்யப்படுவார்கள். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி ராம்குமார் தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: