திங்கள், 26 ஜூன், 2017

BBC :பாகிஸ்தான்: எண்ணெய் டாங்கர் லாரி தீ விபத்தில் 140 பேர் பலி


பாகிஸ்தானின் கிழக்கு பஹவல்பூரில் எண்ணெய் டாங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். விபத்து ஏற்பட்ட வண்டியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்க கிராமத்தினர் கூடியதாக கூறப்படுகிறது. காயமுற்ற டஜன் கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வழியே நடந்து சென்று சிகரெட் பற்ற வைத்த ஒருவரால் இந்த எண்ணெய் லாரியில் தீ பரவியிருக்கலாம் என்று மீட்புதவி சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"மிக சிறியதொரு சம்பவம் பெரியதொரு வெடிப்பு சம்பவமாக மாறிவிட்டது" என்று ஜாம் சாஜாடு கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு, லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நவாஸ் ஷெரிஃப், தன்னுடைய பயணத்தை பாதியில் முடித்துவிட்டு நாடு திரும்புவதாக பாகிஸ்தான் அரசு செய்தி நிறுவனமான ஏபிபி தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.
பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பலியானோரின் உடல்கள் மிக மோசமாக எரிந்துவிட்டதால், சிலரின் உடல்களை டிஎன்ஏ சோதனை செய்து அடையாளம் காண வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கராச்சியில் இருந்து லாகூருக்கு 25 ஆயிரம் லிட்டர் எரிவாயுவை இந்த டாங்கர் லாரி கொண்டு சென்றதாக ஏபிபியிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: