சனி, 1 ஆகஸ்ட், 2015

ராமதாஸ் :அரசு செலவில் ஜெயா புகழ் பாடும் தர்மம் வெல்லும் ஆவணப்படம் தடை செய்யப்படவேண்டும்

சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து ‘தர்மம் வெல்லும்‘ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை அனைத்த திரையரங்குகளிலும் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிடுவதை ஏற்க முடியாது என்றும், இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் ‘தர்மம் வெல்லும்‘ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.  அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிட்டு மகிழ்வதை ஏற்க முடியாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா என்ற தனி மனிதர் மீது தொடரப்பட்டதாகும். தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு, ஜெயலலிதாவின் புகழ் பாடும் ஆவணப்படத்தை வெளியிடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். எனவே, தர்மம் வெல்லும் என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்திரைப்படத்தை தயாரிக்கவும், இதுவரை திரையிடவும் ஆன செலவுகளை ஜெயலலிதாவிடமிருந்து வசூலிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: