வெள்ளி, 31 அக்டோபர், 2014

காமராஜர் மூப்பனார் படத்துக்கு பதிலாக ராகுல் படமா? ஞானதேசிகன் ராஜினமா ! தமிழ் மாநில காங்கிரஸ் ?

புதிய உறுப்பினர் அட்டை சம்பந்தமான பிரச்னையில், டில்லி மேலிட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம், ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் சமீபத்தில் நடந்தது. அதில், சோனியா, ராகுல் படங்கள் கொண்ட உறுப்பினர் அட்டையை மட்டும் வழங்க வேண்டும் என, மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலிடத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என, ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், காமராஜர் மற்றும் மூப்பனார் படங்கள் இல்லாத உறுப்பினர் அட்டையை நாங்கள் வாங்க மாட்டோம் என, வாசன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன் கூறுகையில், ''தமிழகத்தில், காமராஜர், மூப்பனாரை முன்னிலைப்படுத்தி தான் கட்சியை வளர்க்க முடியும். அவர்களின் படங்களை போடவில்லை என்றால், கட்சியே இல்லாத நிலை ஆகி விடும்.  ஒரு ஊரில் 10 பேர் காங்'கிரசில் இருந்தால் அந்த 10 பெரும் தலைவர்களே,அந்தந்தக் கோஷ்டிக்கு. இதில் மேலும் உடைவதற்கு என்ன இருக்கு?
எனவே, அவர்கள் படங்களுடன் உறுப்பினர் அட்டைகளை வழங்க வேண்டும். விரைவில் நாங்கள் டில்லிக்கு சென்று, சோனியாவை சந்தித்து வலியுறுத்துவோம்,'' என்றார்.
ராஜினாமா கடிதம் குறித்து ஞானதேசிகனிடம் கேட்ட போது, ''நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை; நாளை சத்தியமூர்த்தி பவன் வாருங்கள். பேட்டியாக கொடுக்கிறேன்,'' என்றார்.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு, ஞானதேசிகன் சென்னைக்கு திரும்பியதும், வாசனை சந்தித்து, டில்லியில் நடந்த சம்பவங்களை விளக்கியதும், வாசன்'அப்செட்' ஆனார்.இதனால், விரைவில், தன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தி, மேலிடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணத்தில் வாசன் உள்ளார். இதனால், தமிழக காங்கிரஸ் இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: