திங்கள், 2 ஜூன், 2014

பீடித் தொழில் – ஒரு பார்வை

பீடி சுற்றும் பெண்கள்ஓரிரு ரூபாய்களில் விற்கப்படும் மினி சிகரெட் முதல் பத்திருபது ரூபாய்களில் விற்கும் உள்நாட்டு-வெளிநாட்டு கிங்ஸ் சிகரெட்டை புகைப்போர் உலகம் தனி. புகை பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றாலும் அதற்கு பலியாகியிருப்போர் பலர். ரூபாய்களில் வாங்கி புகைக்க முடியாத சாதாரண  உழைக்கும் மக்கள் இன்றும் பீடியைத் தான் பயன்படுத்துகிறார்கள். இன்றளவும் உடலுழைப்பு வேலை செய்யும் தொழிலாளர்கள் பரவலாக பீடி பயன்படுத்துவதை பார்க்கலாம். பெருகி வரும் வாழ்க்கை பிரச்சினைகளின் பதட்டத்தை சிறு அளவில் தணிப்பதாக நம்பி புகை பிடிக்கும் பழக்கம் இங்கே வேரூன்றியிருக்கிறது. புகை பிடிப்பதை குறைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அரசு ஆண்டுக்காண்டு சிகரெட், பீடி விலையை ஏற்றுகிறது.

பீடி சுற்றும் பெண்கள்
இதனால் புகை பிடிக்கும் பழக்கம் குறைகிறதா இல்லை மக்கள் அதற்கு அதிகம் செலவு செய்கிறார்களா? இதில் பின்னதுதான் நடக்கிறது என்பது சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகரித்து வரும் இலாபத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் பீடி தயாரிக்கும் சிறு நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளும் இந்த அதிக வரியினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் பீடியின் விலையை சிகரெட் போல ஏற்ற முடியாது. இந்த சுமையை இவர்களே தாங்கிக் கொள்வதால் முன்பு போல பீடி தொழில் இயங்கவில்லை.
சாதாரண மக்களுக்கான பீடி எப்படி தயாராகிறது? அந்த தொழில் எப்படி இயங்குகிறது?
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் பீடி தொழில் அதிகமும் பிரசித்தம். பெண்கள் தான் பெருமளவில் பீடி சுற்றும் வேலையில் கணிசமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலை என்பதால் பெண்கள் மத்தியில் முன்பு இந்த தொழில் பிரபலமாக இருந்து வந்தது. தற்போதும் குறைந்து விட்டாலும் இப்போதும் பெண்களே வேலை செய்கின்றர்.
வறுமை, பெண்களுக்கு படிப்பு தேவையில்லை, திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும், தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என பல காரணங்களால் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பல பெண்கள் பீடி சுற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். பீடித் தொழிலில் ஒரு ஆள் பார்க்கும் வேலை செய்யும் தகுதி அடைந்தால் ஒரு கார்டு கொடுப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் அனுபவத்தில் இரண்டு மூன்று  கார்டுகள் பெறும் போது, அதாவது ஒரு ஆள் மூன்று ஆட்கள் வேலை செய்யும் நிலை அடையும் போது, அவர்களுக்கு திருமண சந்தையில் கிராக்கி அதிகம். அதாவது வரதட்சணை பேரத்தில் கொஞ்சம் கருணை காட்டப்படுவார்கள். இதனாலேயே இந்த தொழிலுக்கு நேர்ந்து விடப்பட்டவர்கள் பலர். அதுவுமன்றி பொருளாதாரம் நலிவுற்றிருக்கும் இக்காலத்தில் வீட்டு கைச்செலவுக்கு பணம் கிடைப்பதால் பல பெண்களும் இவ்வேலையை விரும்பியே செய்கிறார்கள்.
“முன்னாடியெல்லாம் நானும் என் தங்கச்சியும் சேந்து மூன்று கார்டு சுத்துவோம். வீட்டுக்கு தெரிஞ்சி இரண்டு கார்டு, யாருக்கும் தெரியாம மூணாவது கார்டு. அது எங்களுக்கு தாவணி எடுக்கவும், வளையல் எடுக்கவும் உதவும். அப்படி எடுக்கும்போது தான் எங்க மூணாவது கார்டு வீட்டுக்கே தெரியவரும்…….” என்று தன் மலரும் நினைவை கூறுகிறார், ஒரு பெண் தொழிலாளி.
டெலிபோன் பீடி
டெலிபோன் பீடி
ஒரு காலத்தில் யானை மீது விளம்பர ஊர்வலம், கோவில் கொடைகளுக்கு ஸ்பான்சர் செய்து அதன் நடுவில் தங்கள் பீடி விளம்பரம் செய்வது என்று கோலோச்சிய பீடி தொழிலின் இன்றைய நிலை என்ன?
இன்று  தட்டி போர்டு விளம்பரத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது அத்தொழில். “முந்திலாம் யானை மேல பீடி வெளம்பர போர்ட வெச்சி வெளம்பரம் பண்ணுவோம். இன்னைக்கு தொழில் முடங்கி போச்சி. ஒரு காலத்துல சோறு போட்ட தொழிலுங்கிறதால விடாம பண்ணுதேன்” என்று பீடி தொழிலின் இன்றைய நிலை சொல்லும் மீரா சாகிப், ஒரு பீடி கம்பெனி ஏஜென்டாக இருக்கிறார்.
பீடி தொழிலில் பீடி சுற்றுபவர்கள், பீடி நிறுவனம் இவர்களுக்கு நடுவே மீரா சாகிப் போன்ற ஏஜெண்டுகள் எனும் மூன்றாம் தரப்பினரும் உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் தான் பீடி தொழிலாளிகளுக்கு பீடி கம்பெனிகளுக்கும் பாலமாக இருப்பவர்கள். நாம் பேசிக் கொண்டிருக்கும் மீரா சாகிப், குஜராத்தை சேர்ந்த டெலிபோன் பீடி என்ற நிறுவனத்திற்கு ஏஜென்டாக இருக்கிறார். அந்த நிறுவனம் இவருக்கு இலை, புகைத்தூள் மற்றும் கூலியாட்களுக்கான சம்பளம் ஆகியவற்றை கொடுத்து விடும். இவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களிடம் மூலப்பொருட்களை விநியோகித்து, பீடியாக மாற்றி குஜராத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கு இவருக்கு கமிசன் கிடைக்கும். தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் இப்படி தனியாக ஏஜெண்டுகளைக் கொண்டிருப்பதில்லை. தாங்களே நேரடியாக அனைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார்கள்.
இந்திய அளவில் மங்களூரை சேர்ந்த கணேஷ் பீடி அதிகமாக விற்பனையாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 10-ம் நம்பர், செய்யது பீடி, காஜா பீடி, எம்.எஸ்.பி, சந்திரிகா பீடி, மோகம், பாலகன் போன்று 25 நிறுவனங்களுக்கு மேல் உள்ளன. இதைப் போன்று குஜராத்தின் டெலிபோன், மலபார் பீடி, சேஷாய் பீடி போன்ற நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களின் ஏஜெண்டுகளோ இல்லை நேரடி கம்பெனிகளோ பல சிறு கிராமங்களுக்கு மையமான ஒரு ஊரில் தங்கள் கிளைகளை திறந்திருக்கிறார்கள்.  பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட விரும்புபவர் ஏதாவது ஒரு ஏஜென்டிடம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்ந்தவுடன் அவர்களுக்கு என்று  தனியாக ஒரு கணக்கு துவங்கப்பட்டு அதற்கான புத்தகம் வழங்கப்பட்டு விடுகிறது. இந்த புத்தகம் தொழிலாளி பெற்றுக்கொண்ட மூலப்பொருட்கள், சமர்ப்பித்த பீடி எண்ணிக்கை போன்ற கணக்குகளை பராமரிக்க பயன்படுகிறது. சிலர் இரண்டு மூன்று புத்தகங்களும் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு பெண், மூன்று நபர்கள் செய்யும் வேலையை செய்கிறார் என்று பொருள். இதைத்தான் மூன்று கார்டு என்று ஏற்கனவே பார்த்தோம்.
பீடி சுற்றுவதற்கான இலை மற்றும் தூளை ஏஜெண்டே கொடுத்து விடுவார். அதற்கு பணம் எதுவும் தரத் தேவையில்லை. அரைக்கிலோ இலைக்கு 200 கிராம் தூள் என்ற விகிதத்தில் மூலப்பொருட்கள் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்தி ஒரு கட்டுக்கு 25 பீடிகள் என்ற விகிதத்தில் நாற்பத்தியைந்து கட்டுகளை ஏஜெண்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரை கிலோ இலையில் 25X45=1125 பீடிகள் தயாரிக்க வேண்டும். இதற்கு ரூ 145 சம்பளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. தமிழகத்தின் பத்தாம் நம்பர் பீடி, இதே வேலைக்கு ரூ 155 சம்பளமாக தருகிறது. இந்த நிறுவனம தான் தமிழகத்தில் அதிக மார்க்கெட் கொண்ட நிறுவனம் என்கிறார் சாகிப் பாய்.
டெண்டு இலை
டெண்டு இலைகளை சுமந்து செல்லும் டோங்கிரியா கோண்டு இனப் பெண். (பீடியில் புகையிலை தூளை வைத்து சுருட்டப்படும் இலை இதுதான்).
கொடுக்கப்பட்ட இலைகளைக் கொண்டு பீடி இலக்கை அடைவது சற்று கடினம் தான். அதை அடைய இலை வெட்டுவதிலிருந்து நூல் சுற்றுவது வரை பல வித்தைகள் உள்ளன.  இவற்றில் எதில் சொதப்பினாலும் கைக்காசை செலவழிக்க வேண்டி வரும். உதாரணமாக பீடி இலையிலிருந்து தேவையான இலையை வெட்டி எடுப்பது என்பது ஒரு கலை.  ஏஜெண்ட் கொடுக்கும் இலையை பதப்படுத்தி அதிலிருந்து எந்த அளவுக்கு அதிகமாக உபயோகமான பகுதிகளை கத்தரித்து எடுக்கிறோமோ அந்த அளவுக்கு 1125 என்ற இலக்கை அடையமுடியும். இலை வெட்டும் திறமையின்மையினாலோ அல்லது மோசமான இலை காரணமாகவோ சமயங்களில் இலக்கை அடைய முடியாமல் போகலாம். அப்படியெனில் சம்பந்தப்பட்ட நபர் சொந்த செலவில் இலைகளை வாங்கி சமாளிக்க வேண்டும். இந்த இலைகள், பெரும்பாலும் அதே ஏஜெண்டிடமிருந்தும், வெளிச்சந்தைகளிலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அரைகிலோ இலை ரூ 100 என்ற விலையில் விற்கப்படுகிறது. எப்போதாவது சில சமயங்களில் இலக்கை மீறி அதிக எண்ணிக்கையில் பீடி சுற்றி விட்டால் அதில் கிடைக்கும் மீதமான பீடியை  வரும் காலங்களில், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதை கணக்கில் கொண்டு சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.
நிறுவனத்தின் அளவுகோல்களுக்கு ஏற்றபடி சுற்றா விட்டாலும் பிரச்சனை தான்.  ஒவ்வொரு நிறுவனத்தின் பீடியும் நீளம், பருமன், பீடி நூல்களின் வண்ணம் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அந்த பீடிகளை தரம் இல்லை என்று  நிறுவனத்தினர் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் ஏற்படும் இழப்பையும் தொழிலாளிதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சம்பளத்தை பொறுத்தவரை 200 கிராம் புகைத்தூளுக்கு (1125 பீடிக்கு) ரூ 145 முதல் 155 வரை கிடைக்கிறது.  சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் 1,125 பீடி சுற்றிவிட முடியும். இதையே முழுநேரமாக செய்தால் 300 கிராம் தூள் வரை சுற்றலாம். தினம் 145 வீதம் வைத்துக்கொண்டால் மாதம் ரூ 4,000 முதல் ரூ 5,000 வரை தான் இவர்களின் சம்பளம் இருக்க முடியும். வீட்டில் சும்மா இருப்பதற்கு இதாவது கிடைக்கிறதே என்றுதான் பலர் இந்த தொழில் செய்கிறார்கள். இந்த சம்பளத்தில்  சேமநலநிதியும் பிடிக்கப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் இந்த சம்பளத்தில் சீட்டு கட்டுகிறார்கள். பணம் தேவைப்படும் நேரங்களில் பி.எஃப் கணக்கை முறித்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
சில நிறுவனங்களில் வார சம்பளமாகவும், சில நிறுவனங்கள் மாத சம்பளமாகவும் தருகின்றன. இந்த குறைந்த சம்பளத்திற்காக பீடி தொழிலாளர்கள் இழப்பது அதிகம். எப்பொழுதும் புகைதுளோடு புழங்குவதால், பீடிசுற்றும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கூட காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட பின்னரும் வேறு வழியின்றி பீடி சுற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
தங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக சேமநல நிதி, இ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை போன்றவற்றை பெற்றிருந்தாலும் இவை பெயரளவிற்குதான் உள்ளன.  பீடி சுற்றுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாகவும் ஆனால அப்படி ஓய்வூதியம் யாரும் பெற்றதுபோல தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.
பீடி ஏஜென்டுகள் வேறு விதமான பிரச்சனைகள் சந்திக்கிறார்கள்.
மங்களூர் கணேஷ் பீடி
மங்களூர் கணேஷ் பீடி
“தமிழகத்தில் வட இந்திய கம்பெனிகள் தான் அதிக அளவில் பீடி உற்பத்தி செய்கின்றன என்றாலும் அவற்றின் உற்பத்தி மையங்கள் தென் தமிழகத்தில்தான் இருந்து வந்தன. தற்பொழுது வட இந்தியாவிலும் பீடி சுற்றும் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் தமிழகத்தை விட குறைந்த கூலியில் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் 200 கிராம் தூளுக்கு சம்பளம் வெறும் ரூ 100 தான்.
அதுபோக இலை மற்றும் புகைத்தூளை அங்கிருந்து கொண்டுவந்து பீடியாக்கி மீண்டும் அங்கு கொண்டு செல்ல செலவு இருமடங்காவதோடு, பல்வேறு வரிகளும் கட்ட வேண்டியிருப்பதால் தமிழகத்தை சமீப காலமாக தவிர்த்து வருகிறார்கள் வட இந்திய முதலாளிகள். இதனால் வட இந்திய நிறுவனங்களுக்கு வேலை செய்யும் என்னை போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுபோக இப்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் இல்லை. புதிதாக பீடி தொழிலுக்கு யாரும் வருவதும் இல்லை. இப்போ எல்லோரும் குளத்து வேலைக்கு (நூறு நாள் வேலை திட்டம்) சென்று விடுகிறார்கள்” என்கிறார் மீரா சாகிப்.
அது போக வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறிவிட்டதால் பீடி நிறுவனங்கள் தங்கள் சந்தையை கணிசமான அளவில் இழந்துள்ளன. 80-களில் மாதத்திற்கு ஒரு கோடி பீடி  செய்து அனுப்பிக் கொண்டிருந்த மீரா சாகிப் தற்போது 7 லட்சம் பீடி தான் சப்ளை செய்கிறார். “இப்போ எல்லாரும் சிகரெட்டு, பாக்கு அது இதுனு மாறிட்டாங்க. யாரும் பீடியை விரும்புறதில்லை. அரசாங்கமும் பீடிக்கு விளம்பரம் செய்ய கூடாதுனு சொல்லுது” என்று சந்தையின் வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்கிறார் அவர். முன்னர் வள்ளியூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், புளியங்குடி  உள்ளிட்ட ஊர்களில் டிப்போக்களை கொண்டிருந்த இவரது நிறுவனம் தற்போது திருநெல்வேலி, புளியங்குடி என இரண்டாக குறைந்து விட்டது.
தமிழகத்திலிருந்து தினம் எவ்வளவு பீடி உற்பத்தியாகிறது என்று கேட்டபோது
“அது தெரியாது. ஆனால் டெலிபோன் நிறுவனம் தினசரி ஒரு கோடி பீடிகளை  தமிழகத்திலிருந்து எடுத்து சென்றது ஒரு காலம். இப்போது அது  20 லட்சம் பீடிகளாக குறைந்து விட்டது. அப்பொழுது  டெலிபோனுக்கு மட்டும் என்னை போன்று 170 நபர்கள் ஏஜென்டுகளாக இருந்தோம். இப்போ 60 பேர் தான் இருக்கிறோம்.” என்றார்.
ஏஜென்டுகளைப் பொருத்தவரை, ஆயிரம் பீடிக்கு ஐந்து ரூபாய் வீதத்தில் கமிசன் கிடைக்கிறது. நிறுவனம் கொடுக்கும் மூலப்பொருட்களுக்கு, 52 கிலோ இலைக்கு 1 லட்சம் பீடி என்ற வீதத்தில் இவர்கள் சப்ளை செய்ய வேண்டும். இலை எப்படி மோசமாக இருந்தாலும் இவர்கள் பீடி எண்ணிக்கையை குறைக்க முடியாது. இதனால் ஏற்படும் சுமை இறுதியாக பீடி தொழிலாளர்கள் தலையில் தான் விழும். மீரா சாகிப்பும் இதை தான் சொல்கிறார்.
தினேஷ் பீடி
கேரள தொழிலாளர் கூட்டுறவு தினேஷ் பீடி
“உங்களுக்கு மாசம் எவ்வளவு  கிடைக்கும் ? “
“அது புள்ளைகள எவ்வளவு களவாங்குதமோ அத பொருத்து.  நம்மள எவ்வளவு களவாங்குறானோ அந்த அளவு கம்பெனிகாரனுக்கு லாபம்” என்று  ‘புள்ளைகள்’ அனைவருக்கும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் சாகிப்.
தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தான் முதலாளிகளின் லாபம் என்பதை அனுபவபூர்வமாக சொல்கிறார் இந்த பாய். ஆனால் மெத்த படித்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் இதை ஒப்புக் கொள்வதில்லை. மேலும் மீரான் பாயிடம் பீடி தொழில் செய்வது இசுலாத்திற்கு விரோதமில்லையா என்றுகேட்ட போது, “இஸ்லாத்தில் அப்படி இருப்பதாக தெரியவில்லையே” என்றவர், “ஒருவேளை அப்படியே இஸ்லாத்துக்கு விரோதமென்றாலும் வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் செய்துதான் ஆகவேண்டும்” என்றார். ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பது வர்க்கமா, மதமா என்று இதைவிட அழகாக யாரும் விளக்க முடியாது.
தங்களுக்கு கிடைக்கும் ஐந்து ரூபாய் கமிசனில் தான் இவர்கள் தங்களது அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநெல்வேலியிருந்து இலை மற்றும் புகைத்தூளை எடுத்து ஒவ்வொரு ஊர் அலுவலகத்திற்கும் கொண்டு சேர்க்க ஆகும் செலவுகள், ஒவ்வொரு கிராமத்திலும் ஆபீஸ் ரூம் வாடகை, பின்னர் பீடியை  டிப்போவிற்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவு போன்ற பல செலவுகளை இந்த ஐந்து ரூபாய் கமிசனிலிருந்து தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிலில் நஷ்டம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்ட ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள் என்கிறார் மீரான். இது போக புகைத்தூளினால ஏற்படும் அனைத்து வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படுகின்றன. ஆயினும் வேறு வழியில்லாததால் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
உலகம் பீடியிலிருந்து நவீனமாக சிகரெட்டுக்கு மாறிவிட்டதன் பின்னணியில் புதிய தலைமுறையினர் யாரும் பீடித்தொழிலுக்கு வருவதில்லை.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் காத்துக்கொள்ள பீடி உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஒருக்கால் புகை பிடிக்கும் பழக்கம் குறைவதன் நீட்சியாக இந்த அழிவை எடுத்துக் கொள்ளலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.
ஐ.டி.சி ஏகபோகம்
ஐ.டி.சி ஏகபோகம்
சிகரெட்டுக்கு அதிக வரி போட்டாலும் புகை பிடிப்போரே அதன் சுமையை சுமக்கின்றனர். நிறுவனங்களுக்கோ இலாபம் பல மடங்குகளில் அதிகரிக்கிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஐ.டி.சி எனும் பன்னாட்டு நிறுவனம், 2012-13-ம் ஆண்டில் மட்டும் 27,136 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றிருக்கிறது. இதில் இலாபம் மட்டும் 8,694 கோடி ரூபாயாகும். இது போக நுகர்பொருள் தொழில், ஓட்டல் என்று நிறைய தொழில் செய்யும் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் சிகரெட் மட்டும் 56% பங்கை அளிக்கிறது. ஆனால், நிறுவனத்தின் இலாபத்தில் சிகரெட்டின் பங்கு 82% ஆகும். அதாவது, விளம்பரம் செய்யத் தேவையில்லாத, போட்டி இல்லாத சிகரெட் விற்பனையில் குறைந்த செலவில் அதிக கொள்ளை அடிக்கிறது ஐ.டி.சி. இந்தியாவின் ஒட்டு மொத்த சிகரெட் சந்தையில் ஐ.டி.சியின் பங்கு  80% வரை இருக்கிறது.
சிகரெட் விளம்பத்திற்கும் தடை இருந்தாலும் ஐ.டி.சியின் ஏகபோகம், மற்றும் பல்வேறு பதிலி விளம்பரங்களால் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தல் தொடர்வதாலும் ஐடிசியின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்தே வருகிறது. எனவே பீடியின் அழிவை ஐ.டி.சியின் பொலிவோடு சேர்த்து பார்க்க வேண்டும். சிகரெட்டுக்கு வரிபோடும் மத்திய அரசு அதை நிறுவனத்தின் தலையில் சுமத்துவதில்லை. ஒரு வேளை புகை பிடிக்கும் பழக்கம் குறைய வேண்டும் என்றால் சிகரெட் உற்பத்தியை நிறுத்துவதுதான் சரியான அணுகுமுறை, அதை விடுத்து வரி போடுவது என்பது பன்னாட்டு முதலாளிகளின் ஆதாயத்திற்கே வழிவகுக்கும்.
இந்தியாவின் புகையிலை நுகர்வில் 48% பீடியின் பங்காக இருக்கிறது. சிகரெட்டை விட பீடியில் கார்பன் மோனாக்சைடு, நிகோட்டின், தார் போன்ற உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். எனினும் சாதாரண மக்கள் தமது வருமானத்தில் இதை விடுத்து பில்டர் சிகரெட்டுக்கு மாறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. உடல் நலனை பீடி மட்டும்தான் கெடுக்கிறது என்று அட்வைசு செய்யும் நண்பர்கள் முதலில் இந்த தொழிலாளிகளின் கடும் உழைப்பு வேலைகளுக்கு மாற்று என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். அதற்கு தீர்வுகாணாமல் குடியும், புகைபிடிக்கும் பழக்கமும் ஒழிவது சிரமம்.
17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் புகையிலை சாகுபடி இந்தியாவிற்கு அறிமுகமானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் பீடி புழக்கத்திற்கு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் குஜராத்தின் பட்டேல் சாதியைச்சேர்ந்த முதலாளிகள்தான் பீடி தொழிலை ஆரம்பித்திருக்கின்றனர்.
தற்போது சுமார் 30 இலட்சம் இந்திய மக்கள் பீடித்தொழிலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பீடி தொழில் ஆரம்பத்திலிருந்தே குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வந்தது. தற்போது ஏனைய குடிசைத் தொழில்களுக்கு கிடைத்த மானிய வெட்டு, சலுகை ரத்து பீடி தொழிலுக்கும் பொருந்தும்.
மங்களூர் கணேஷ் பீடி எனும் முதலாளியின் நிறுவனம் பீடித்தொழிலில் ஏக போகம் செலுத்திய போது கேரளாவின் பீடி தொழிலாளிகள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தொழிலாளர் கூட்டுறவு சங்க தயாரிப்பாக தினேஷ் பீடி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் இயக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கேரள ‘சகா’க்களின் ( தோழர் எனும் வார்த்தையின் மலையாள வார்த்தை சகா) ஒரு அடையாளமாக தினேஷ் பீடி இருந்தது. இன்றும் கூட கேரளாவில் சராசரி மலையாளிகளின் அடையாளமாக பீடி இருக்கிறது என்று கூற முடியும். அதே நேரம் சேட்டன்களும் சிகரெட்டுக்குத்தான் மாறி வருகின்றனர் என்பதை மறுக்க வேண்டியதில்லை.
பீடியை விட அதிகம் ஆபத்துள்ள நேரடி புகையிலை பொருட்களை விழுங்கும் பான் வகையைச் சேர்ந்த புகையிலை பொருட்களே தற்போது அதிகம் நுகரப்படுகின்றன. சில வருடங்களிலேயே இதன் பாதிப்பு பாரதூரமாக வெளிப்படுகிறது. இரண்டு ஷிப்டுகள் தொடர்ந்து வேலை பார்ப்பது, தொடர்ந்து கண் விழிப்பது என்று பல்வேறு இடர்ப்பாடுகளை இத்தகைய புகையிலை பொருட்கள் ‘தணிக்கின்றன’. இறுதியில் அந்த தொழிலாளிகளின் உயிரும் கூட சராசரி இந்தியர்களின் ஆயுளை விட குறைந்த காலத்திலேயே சீக்கிரமே இயங்காமல் நின்று விடுகிறது.
தன்னார்வக் குழுக்களின் ஆரோக்கியக்கேடு என்பதாக மட்டும் பீடி பிடிப்பதை பார்க்காமல், பொருளாதார ஏற்றத்தாழ்வின் அவலமாக பீடி தொழிலை பார்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். ஆரோக்கியத்தின் பொருட்டு புகை பிடிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றால் முதலில் ஐ.டி.சி நிறுவனம் இழுத்து மூடப்படவேண்டும். அப்போதும் கூட பீடித்தொழிலுக்கு மாற்றை அரசு உருவாக்க வேண்டும்.
-    வினவு செய்தியாளர்.

கருத்துகள் இல்லை: