வியாழன், 5 ஜூன், 2014

கமல்நாத் கோபம்: சோனியா சமாதானம் ! லோக்சபா காங்., தலைவராக கார்கே தேர்வு !

லோக்சபா காங்கிரஸ் தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டது, காங்கிர சில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் கமல்நாத்தை சமாதானப்படுத்த, காங்கிரஸ் மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்தலில், நாடு முழுவதும் காங்கிரஸ் பரிதாப தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்க முடியாத அளவுக்கு, வெறும், 44 பேர் தான் எம்.பி.,க்கள் ஆகி உள்ளனர்.இதனால், லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக கூட, சோனியா, ராகுலால் அமர முடியாது. அப்படியே அமர்ந்தாலும், அந்த பதவிக்குரிய சலுகை கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இப்படியொரு இக்கட்டான நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள சோனியாவும், ராகுலும், எதிர்க்கட்சி தலைவர் பதவி ஏற்க மறுத்து விட்டனர். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியும், இந்த பொறுப்பை ஏற்க, ராகுல் மறுத்துள்ளது, அக்கட்சி யில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.இந்த சர்ச்சை அடங்குவதற்குள், புதிய பிரச்னை யில் காங்கிரஸ் மேலிடம் சிக்கி தவிக்கிறது.


மொத்த எம்.பி.,க்களில், 10 சதவீதம் பேருடைய கட்சிக்கு தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்பது விதி. ஆனால், எதிர்க்கட்சிகளில் எந்த கட்சிக்கும் இந்தளவுக்கு எம்.பி.,க்கள் இல்லாத நிலையில், தனிப்பட்ட இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில், காங்கிரசே, எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட உள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் லோக்சபா கட்சி தலைவராக யார் தேர்வு செய்யப்படுகிறாரோ, அவரே, பிரதான எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தான் இந்த பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என்று, காங்கிரசார் விரும்பினர். ஆனால், அவர் மறுத்ததை அடுத்து, தகுதி வாய்ந்த ஒருவரை தேர்வு செய்வர் என, எதிர்பார்த்தனர்.ஆனால், சோனியா வும், ராகுலும் சேர்ந்து, லோக்சபா காங்கிரஸ் தலைவராக, முன்னாள் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயை, தேர்வு செய்துள்ளனர்.இவரது தேர்வு, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் கமல்நாத் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஒன்பது முறை எம்.பி.,யான கமல்நாத், கட்சியில் சீனியர். அந்த அடிப்படை யில் தான், அவரை, தற்போதைய பா.ஜ., அரசு, தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்துள்ளது.ஆனால், காங்கிரஸ் கட்சியில் அவரை ஓரங்கட்டியதில் அவருக்கு கடும் வருத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திரா காலத்தில் இருந்து அமைச்சராக இருந்து வருபவர் என்பது மட்டுமின்றி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்து, நெருக்கடியான நேரத்தில் அரசை காப்பாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.அதை விட முக்கியமாக, டில்லி அரசியல் தெரிந்த ஒருவர் என்பதால், அவரையே தேர்வு செய்திருக்க வேண்டும் என்று, காங்கிரசில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலர் கருதுகின்றனர்.காங்கிரஸ் மேலிடத்திற்கு தன் எதிர்ப்பை காட்டும் விதத்தில், கடந்த ஒரு வாரமாக, மத்திய பிரதேசத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் போய் தங்கி விட்டார் கமல்நாத். இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் பொறுப்பை அவர் ஏற்றார்.<- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: