வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பிரகாஷ் ராஜுக்கு ஜாதி சங்கம் கொலை மிரட்டல் ! கௌரவம் படத்தை ஏன் எடுத்தாய்?

எனக்கு கொலை மிரட்டல் வருகிறது”
என்று கூறியுள்ள நடிகர், தயாரிப்பாளர்
பிரகாஷ்ராஜ், “கௌரவம் என்று படத்தை எடுத்ததால், கன்னடக்காரன் உனக்கு எதுக்கு இந்த வேலை… தொலைத்துவிடுவோம்” என்கிறார்கள்” என்றார். அருகில் இருந்த இயக்குனர் ராதாமோகன், ‘எனக்கு கொலை மிரட்டல் வரவில்லை. ஆனால் ஏன் இந்த படத்தை எடுத்தாய் என்று மிரட்டுகிறார்கள் என்றார்.
ஜாதி விட்டு ஜாதி காதலிக்கும் விவகாரத்தில் ‘கௌரவக் கொலை’ செய்வது பற்றிய படம் என்பதால், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த சங்கம் ஒன்று, “இது நம்ம ஜாதி பற்றிய படம்” என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டுள்ளது.
இது பற்றி பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழில் மொழி, அபியும் நானும், அழகிய தீயே என நல்ல படங்கள் தயாரித்து வருகிறேன். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘கௌரவம்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். கவுரவ கொலை பற்றிய கதை.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் ஏன் உலகம் முழுவதும் பல இடங்களில் நடக்கிறது. தருமபுரி சம்பவத்தை பற்றியோ, கோவையில் உள்ள ஒரு சமுதாயத்தை பற்றிய கதையோ இது கிடையாது. ஆனால் எனக்கு ட்விட்டரில் ஒரு சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. கவுரவ கொலை பற்றி உனக்கு எதுக்கு கவலை. கன்னடக்காரனான நீ எப்படி இந்த படத்தை எடுக்கலாம். தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை படம் வரும்போதும் இதுபோல் சிலர் பிரச்னை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதை யார்தான் தட்டிக்கேட்பது? நான் கேட்பேன். எனக்கு துணையாக இளைஞர்கள், ரசிகர்கள், அரசு இருக்கிறது.
தற்கொலையே தவறு என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது கவுரவம் என்ற பெயரில் ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அதைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறேன். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு எதிராக இப்படத்தை எடுக்கவில்லை” என்று கூறினார்.
ஜாதிச் சங்கம் ஒன்றும் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் பிரகாஷ்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து திட்டியிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம், தடை போடணும் என்று யாராவது கிளம்பினால் பிய்த்துக் கொண்டு படம் ஓடும் காலம்!

கருத்துகள் இல்லை: