வியாழன், 7 ஜூலை, 2011

தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி செல்லும் ரகசிய கேபிள்கள்

  நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெ. தகவல்

டெல்லி: முறைகேடான வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டைச் சுற்றி ஆப்டிகல் பைபர் கேபிள்கள் போடப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி வந்த ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து ரகசிய கேபிள்கள் செல்வதாக டைம்ஸ் நௌ டிவியில் வெளியான செய்தியைப் பார்த்தேன். சென்னைக்கு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மாறன், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனது வீட்டில் பி.எஸ்.என்.எல் இணைப்புகளை பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தி வந்ததாகவும், கிட்டத்தட்ட ஒரு ரகசிய எக்ஸ்சேஞ்ச் ஆக அது பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான இணைப்புகளை வாங்கி அதை தனது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டிவி சானல்களுக்கு முறைகேடாக பயன்படுத்தினார் தயாநிதி மாறன் என்பது குற்றச்சாட்டாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை ரகசிய கேபிள்கள் புதைக்கப்பட்டது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தயாநிதி மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகம் வரை கிட்டத்தட்ட6.4 கிமீ அளவுக்கு இந்த கேபிள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவியின் சேனல்களுக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியுள்ளார் என்று டைம்ஸ் நெளவ் செய்தி கூறுகிறது.

தயாநிதி மாறனின் வீட்டிலிருந்து சன் டி்வியின் அலுவலகம் வரை இந்த கேபிள்கள் செல்வது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. கேபிள் பதிக்கும் பணிக்கான அனுமதியை கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் சென்னை மாநகராட்சி சன் டிவிக்குக் கொடுத்துள்ளது. தனது வீட்டில் ரகசிய எக்ஸ்சேஞ்ச் செயல்படவில்லை என்று தயாநிதி மாறன் கூறி வருகிறார். ஆனால், இந்த கேபிள் கட்டமைப்பு ஏன் என்பதை அவர் இதுவரை விளக்கவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை: