திங்கள், 3 மே, 2010

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தலைக் கண்டித்து, இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். யாழ். குடா நாட்டில் கப்பம் கோரி சிறுவர்கள் கடத்தப்பட்டமை, பாலியல் வல்லுறவு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சாவகச்சேரி நீதிபதி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
மேற்படி நடவடிக்கைகளை நிறுத்தும் வகையில் கப்பம் கேட்போர் மற்றும் ஆயுதக்குழுவினர் நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனைக் கண்டித்தே மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டனர். இது போன்ற செயற்பாடுகள் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயல் எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரமும் இதனால் அர்த்தமற்றதாக போய்விடக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் இது போன்ற பணிப்பகிஷ்கரிப்புக்களும் தொடர்ந்து இடம்பெறும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். சட்டத்தரணிகளின் இச்செயற்பாடுகளினால் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: