திங்கள், 3 மே, 2010

கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள்


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சரான ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.அந்த எண்ணிக்கையிலும் நாற்பது சதவீதமானவர்கள் நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியான பெண்கள் மிகவும் பலவீனமான நிலையிலும், அடிப்படை வாழ்வாதாரங்களை எதிர்நோகியுள்ள நிலையிலும் அவர்களுக்கான உதவிகள் உடனடியாக தேவை என்கிற கருத்துக்கள் இலங்கையில் வெளியாகி வருகின்றன.

அண்மையில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த மகளிர் குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் சுற்று பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள விதவைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.

இந்தியா திரும்பிய அந்தக் குழுவினர் இலங்கையிலுள்ள இப்படியான பெண்மணிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

உடனடி உதவியாக ஆயிரம் பேருக்கு சுயதொழில் கல்வி மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: