செவ்வாய், 19 ஜனவரி, 2021

'அந்தரி இல்லு!' எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்!

Image may contain: 2 people, people standing
dinamalar : எங்கள் வீட்டில் யாரும் தங்கி சமைத்து சாப்பிடலாம்! பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது பற்றி, டாக்டர் சூரிய பிரகாஷ் விஞ்சமூரி - டாக்டர் காமேஸ்வரி தம்பதி: "ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம். 'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.
அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.
பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.
அதுபோல, தேவைப்படுபவர்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், தங்கியிருந்து சாப்பிடவும் செய்யலாம் என நினைத்து, 2006ல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், கொத்த பேட்டையில், இந்த வீட்டை உருவாக்கினோம்.
இங்கிருக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்தி, சமைத்து, யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். தயாராக வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது மட்டுமின்றி, இங்கு இருக்கும் உடைகளையும் எடுத்து அணிந்து கொள்ளலாம்.
இந்த இல்லத்தின் பெயர், 'அந்தரி இல்லு!' காலை, 5:00 மணியிலிருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, யார் வேண்டு மானாலும் இங்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்; இல்லம் திறந்திருக்கும்.
எங்கள் சொந்த வீட்டில் அரிசி, சமையல் காஸ் தீர்ந்து போயிருக்கும். ஆனால், எங்களின் இந்த வீட்டில், ஒருபோதும், எந்த பொருளும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்கிறேன்.
டாக்டராக இருக்கும் நானும், என் மனைவியும் சம்பாதிக்கும் பணத்திலிருந்து மட்டுமே இந்த வீட்டை நடத்துகிறோம். அது மட்டுமின்றி, மன நிம்மதிக்காக வருபவர்களுக்கும் இங்கு இடம் உண்டு. இங்குள்ள மணியை அடித்து, அவர் வந்திருக்கிறார் என்பதை தெரிவித்தால், அவர் முன் உட்கார்ந்து, அவர் பேசுவதை பொறுமையாக கேட்போம்.
அதிலேயே பலரின் மன அழுத்தங்கள் தீர்ந்து போகும். அது மட்டுமின்றி, இங்கு சிறிய நுாலகமும் உள்ளது. இங்கேயே சமைத்து, சாப்பிட்டு, தங்கி, புத்தகங்களை எடுத்து படித்து, வேலைக்கு சென்ற இளைஞர்கள் பலர் உள்ளனர். பல லட்சம் பேரின் பசியை போக்கியுள்ள இந்த வீடு, எங்களுக்கு பிறகும் இயங்கும் வகையில் செய்துள்ளேன். பல இடங்களில், இதுபோன்ற இல்லங்களை திறக்கவும் ஆசை உள்ளது!
- தினமலரிலிருந்து...
திருப்பூர். இரா. சுகுணாதேவி-

கருத்துகள் இல்லை: