திங்கள், 18 ஜனவரி, 2021

புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணி கேள்விக்குறி?

minnambalam :திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது இன்று (ஜனவரி 18) புதுச்சேரியில் நடந்த மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம். புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணியை கேள்விக்குறியாக்கும் வகையில் திமுக அமைத்துள்ள வியூகம் பற்றி, புதுச்சேரியில் திமுக முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் என்ற தலைப்பில் முதன் முதலில் மின்னம்பலத்தில் ஜனவரி 6 ஆம் தேதியே செய்தி வெளியிட்டோம். அதுவே இன்று நடந்திருக்கிறது. புதுச்சேரியில் இன்று திமுக சார்பில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், “புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வில்லையென்றால் நான் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஜெகத்ரட்சகனை புதுச்சேரியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் மாநிலப் பொறுப்பாளரான சிவக்குமார் பேச...அதன் பின் புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடந்த மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் ஜெகத்ரட்சகன். “நான் தாய் மடியில் பிறந்து தாய் விரலை பிடித்து விளையாடிய மண் இந்த மண். இந்த மண்ணைப் பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. என் அருமை சொந்தங்களே...கறுப்பு சிவப்பு கொடி உழைக்கும் மக்களின் கொடி. நமது தலைவர் கலைஞர் செம்மொழிக்காக பாடுபட்டவர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்.

அவரது வழியில் தலைவர் தளபதி அவர்கள் என்னை, ‘புதுச்சேரிக்கு சென்று வாருங்கள்’ என்று வழியனுப்பி வைத்துள்ளார். நான் புதுச்சேரிக்கு தலைவரின் தூதுவராக வந்துள்ளேன். இந்த எழுச்சி ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சியாக இருக்கிறது. இந்த எழுச்சியை தலைவரிடம் தெரிவிப்பேன்.

நான் இந்த ஊர்க்காரன். இப்போது இந்த ஊரின் நிலையைப் பார்த்தால் என் வயிறு எரிகிறது. இங்கே எத்தனை ஆலைகள் மூடிக் கிடக்கிறது? இதனால் எத்தனை குடும்பங்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர்? இவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள்?

எனது கனவு புதுச்சேரி மாநில மக்கள் நன்றாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் முதலீடு செய்ய இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல பேர் காத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக, அந்த முதலீடு செய்யும் முதலாளிகளின் காலில் விழக் கூட தயங்க மாட்டேன். இதில் என்ன மரியாதைக் குறைவு இருக்கிறது.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... உங்களில் ஒருவன்.

திமுக தலைமையிலான கூட்டணியே இங்கே வெல்லும். திமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பதை அங்கே இருக்கும் தலைவர் முடிவு செய்வார். தூய்மையான ஒரு ஆட்சியை, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஆட்சியை நாம் புதுச்சேரி மக்களுக்குக் கொடுப்போம்.

உங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். முப்பது இடங்களிலும் நாம் வெற்றிபெற வேண்டும். இல்லையேல் இதே மேடையில் தற்கொலை செய்துகொள்வேன்” என்று அதிரடியாகப் பேசி முடித்தார் ஜெகத்ரட்சகன்.

புதுச்சேரியில் திமுக தலைமையில் காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி அமையப் போகிறது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்விக் குறி பெரிதாக எழுந்து நிற்கிறது.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: