புதன், 25 டிசம்பர், 2019

மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?.. விரைவில் இது வெளிப்படையாகவெ தெரியவரு

டிஜிட்டல் திண்ணை: மோடி - அமித் ஷா: மோதல் ஆரம்பம்?மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“இவர்கள் இருவருக்கும் இடையே உரசல் வர வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொன்னவர்கள் கூட, ஒருவேளை அப்படியும் இருக்குமோ, அரசியல் - அதிகார விஷயத்தில் எதுவும் நடக்கலாமோ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்துதான் டெல்லியில் தொடங்கி இந்தியா முழுவதும் மேற்கொண்ட கேள்விகளும் வியூகங்களும் எழுந்து வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஒரே ஆண்டில் ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை இழந்திருக்கிறது பாஜக. மோடி - அமித் ஷா மேஜிக் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் என்று சொதப்பி வருகிறது.
இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பொதுமேடைகளில் பிரதமரின் கருத்தும், அமித் ஷாவின் கருத்தும் முற்றிலும் எதிர் திசைக்குச் சென்றதை பாஜகவினர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும். அதைப் பின் தொடர்ந்து நாடு முழுதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். ஊடுருவல்காரன் ஒருத்தனும் இங்கே இருக்க முடியாது, தூக்கி வெளியே போட்டுவிடுவோம்’ என்று நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஜார்க்கண்ட் மேடைகளில்கூட அமித் ஷா தனக்கே உரிய உறுதியான மொழியில் பேசினார். பாஜக செயல் தலைவர் நட்டாவும் இதையேதான் பேசினார்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘என்ஆர்சி என்பது எங்கள் திட்டத்திலேயே இல்லை’ என்று அறிவிக்க, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவில் பலருக்கே அதிர்ச்சி. 2019 தேர்தல் அறிக்கையிலேயே இதுபற்றி நாம் சொல்லியிருக்கிறோம். ஆனால், பிரதமர் மாற்றிச் சொல்கிறாரே என்று கட்சிக்குள்ளேயே விவாதம் ஏற்பட்டது
ஆனால், சென்னையில் பேட்டியளித்த தேசிய செயலாளர் முரளிதர் ராவ், ‘பிரதமர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனாலும் கட்சியின் நிலைப்பாடு என்பது என்ஆர்சி நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதுதான்’ என்றார். அதேபோல மபி முன்னாள் முதல்வரும் பாஜகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான சௌகானும், ‘கட்சியின் முடிவு என்பது என்ஆர்சி வேண்டும் என்பதே’ என்றார்.
இந்த நிலையில் சிஏபிஎன்ஆர்சியை உடனடியாக அமல்படுத்துவதில் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்துக்குள் காஷ்மீர் 370 ரத்தாகிவிட்டது, ராமர் கோயிலுக்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது, அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேட்டு, வெளிநாட்டு சட்ட விரோத குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு தடுப்பு முகாம்கள் என்று வேகவேகமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்பட்டுக் கொண்டிருந்ந்தார். கடந்த பட்ஜெட் தொடர், நடந்து முடிந்த இந்தத் தொடர் என நாடாளுமன்றத்தில் அமித்ஷாவே மையமாக செயல்பட்டு வருகிறார். மோடிக்கு அடுத்த இடம் என்று வரணிக்கப்பட்டவர், இன்று மோடிக்கு இணையாக ஏன் மோடியை விட ஒருபடி மேலே வைத்தும் கட்சியினரால் பேசப்பட்டு வருகிறார்.
இதெல்லாம் மோடிக்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ தெரியவில்லை. நாட்டில் இத்தனை விவாதங்களைக் கிளப்பியிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யபப்பட்டபோது அந்த மசோதாவுக்கு ஆதரவாக மோடி ஓட்டுப் போடவில்லை என்கிறார்கள். இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொது மேடைகளிலேயே, ‘இது நல்ல மசோதா என்கிறீர்கள். ஆனால் பிரதமரான நீங்களே ஏன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவில்லை?’என்று பகிரங்கமாக கேட்டு வருகிறார். பிரதமர் சிஏபிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று மம்தா பகிரங்கமாக சொல்லியும் அதற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை. ஊடகங்களும் இதுகுறித்து பெரிதாக எழுதவோ, விவாதிக்கவோ இல்லை.
இப்போதைக்கு சிஏஏ, என்.ஆர்.சி. வேண்டாம் என்பது மோடியின் கருத்து. ஆனால் அது அமித் ஷாவால் ஏற்கப்படவில்லை.எனவேதான் தன் கருத்தை வலுப்படுத்தும் விதமாக டெல்லி பொதுக்கூட்டத்தில், ‘என்.ஆர்.சி. இப்போதைக்கு இல்லை’என்று பேசிவிட்டார் மோடி.
இதன்பின் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் என்.ஆர்.சி. பற்றி எதுவும் குறிப்பிடாமல் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என்பிஆர் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா , ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (என்ஆர்சி) தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் (என்பிஆர்) எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று இன்று தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி கூறியது முற்றிலும் சரியானது. என்ஆர்சியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சரவையிலோ எந்த வகையிலும் விவாதிக்கப்படவில்லை. என்.பி.ஆருக்கு மேற்கு வங்க, கேரள முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.அவர்களிடம் நான் பணிவுடன் கேட்பது என்னவென்றால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். அவர்கள் இருவரும் முடிவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இருவரின் அரசியல் காரணங்களுக்காக, ஏழைகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள், உதவிகள் கிடைக்காமல் போய்விடும்’ என்று தன் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டுப் பேசியுள்ளார்.
இப்போதைக்கு மோடியின் நிலைப்பாடு அவர் பிரதமர் என்பதால் மத்திய அரசுக்குள் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் கட்சித் தலைவராக அமித் ஷாவே இருக்கிறார். பாஜகவின் கொள்கையே நாடு, கட்சி, அதன் பிறகே தனி நபர் என்பதுதான். எனவே மோடிக்கும், அமித் ஷாவுக்குமான இந்த கருத்து மோதல் இப்போது லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. விரைவில் இது வெளிப்படையாகவெ தெரியவரும் என்பதே பாஜகவின் தற்போதைய நிலவரம்?” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: